Wednesday, October 21, 2015

அறியாமலிருக்கும் அற்புதங்கள் - 6

ஆப்பிரிக்கா என்றதுமே நம்மில் பலருக்கு நினைவுக்கு வருவது கருப்பு இன மக்களும், அடர்த்தி மிகு பசுமைக்காடுகளும் தான். டிஸ்கவரி சானல் உபயத்தில் ஏராளமான பரப்பில் காட்டு விலங்குகளின் விநோதங்களும், அங்குள்ள  பழங்குடி மக்களின் வாழ்க்கை முறைகளும் இன்றைக்கு பலருக்கு பரிச்சயமானது தான். சில வருஷங்களுக்கு முன்பாக ஆப்பிரிக்காவிலிருந்து உதகையில் வந்து தங்கி படிக்கிற மாணவர்களின் இசை நிகழ்ச்சி நடந்தது. கென்யா, தன்சானியா, நைஜீரியா என்று பலபல ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வந்திருந்த அவர்கள், எவ்வித இசைக்கருவிகளும் இல்லாமல் வெறும் கைத்தாளங்கள், சொடுக்குகளோடு பாடிய கிறிஸ்துவ பாடல்கள் மொழியின் அர்த்தம் விளங்காவிட்டாலும் எம்மை பிரம்மிக்க வைத்தது. அவர்களின் சாட்சிகள் கூடி இருந்த நம் மக்களுக்கு இன்னொரு செய்தியை சொல்லாமல் சொல்லிற்று.

தேச எல்லைகளைத் தாண்டி, இன எல்லைகளை தாண்டி இந்த பலபல தேசங்களிலிருந்து வந்த கருப்பு இன மாணவர்களுக்கும் ஆண்டவர் போதுமானவராக, புதிய வாழ்க்கையைத் தருபவராக இருக்கிறாரே என்ற செய்திதான் அது.

சமீப நாட்களில் ஆப்பிரிக்க தேசங்களின் பின்னணியில் இருந்து வருகிற பல ஊழியர்களை GOD TV சேனலில் மட்டுமல்ல, நம் பல சபைகளின் சுவிஷேசக் கூட்டங்களிலுமே பார்க்க முடிகிறது. அந்த தேசங்களில் வெடிக்கிற எழுப்புதல்கள், பெருகும் திருச்சபைகள் பலருக்கு ஆச்சர்யமாகவே இருக்கும்.
ஊடகங்களின் வலிமை அதிகம் இல்லாத அந்த நாட்களில் 'டேவிட் லிவிங்க்ஸ்டன்' (David Livingstone) மூலமாக, ஆப்பிரிக்கா பற்றின தகவல்கள் வர; அநேகரை அது பிரமிக்க வைத்தது. மனிதரை தின்னும் காட்டுவாசிகள் உட்பட அந்த அதிவிநோதமான செய்திகள் திகைக்க வைத்தது.  ஆப்பிரிக்கா பற்றி இப்படியாக அறியப்பட்டிருந்த கட்டத்தில் எப்படி திருச்சபைகளுக்கான கதவுகள் எப்படி விரிய விரியத் திறந்தன என்பது மிகவும் ஆர்வமூட்டுகிற ஒன்றுதான்.

மானுடவியலாளர் டான் ரிச்சர்ட்சன் குறிப்பிடுகிற பழங்குடிகளில் இரண்டு குடிகளைப் பற்றி நாம் பார்க்கப் போகிறோம்.  எப்படி சுவிஷேசத்திற்கான கதவுகளை அந்த பழங்குடி மக்களின் கலாச்சார காரியங்களினூடே வைத்திருந்தார் என்கிற நாம் இதுவரை அறியாமலிருக்கிற அற்புதத்தை விளக்குகிறார் அவர்.

மலைப் பகுதிகள் நிறைந்துள்ள தென் மத்திய எத்தியோப்பியாவில் பலவிதமான பழங்குடி இன மக்கள் உண்டு. விஷேசம் என்னவெனில் இந்த மக்களின் ஒரு பொதுவான நம்பிக்கை 'எல்லாவற்றையும் படைத்த (கடவுள்) ஒருவர் இருக்கிறார்' என்றும் அவர் "MAGANO" அழைக்கப்படுகிறார் என்பதுதான்.  (MAGANO என்றால் Omnipotent Creator of All என்று அர்த்தமாம்). 

(இனி வரும் பல ஆப்பிரிக்க பெயர்களை, தமிழில் எழுதும் பொழுது வினோதமாக தொனிப்பதால், பெயர்களை ஆங்கிலத்திலேயே குறிப்பிட விரும்புகிறோம்.)
இந்தக் குடிகளில் Darassa என்னும் இன்னும் குறிப்பாக "Gedeo" என்று அறியப்பட்டிருக்கிற ஒரு பழங்குடி இன மக்கள் உண்டு. இந்த இன மக்கள் பெரும்பாலும் இந்த "MAGANO"வை தொழுது கொண்டாலும், முழுமையாக உண்டா என்றால் இல்லை. சொல்லப் போனால் இப்படி "MAGANO"வை தெய்வமாக கொண்டிருந்த இவர்கள் "Sheitan" என்று அழைக்கப்படுகிற (தமிழில் இதை சொல்லிப் பார்க்க 'சைத்தான்' என்று குறைய வருவதை பார்க்க வியப்பாக இருக்கிறது அல்லவா?) துர்தேவதைக்கு, அதன் கோபத்திற்கு அதிகம் பயப்படுவார்களாம், கவலைப்படுவார்களாம்.

இந்த "Gedeo" மக்களின் மத்தியில் ஊழியம் செய்த Albert Brandt, அவர்களிடம் ஒருமுறை கேட்டாராம், "MAGANO கடவுளை இத்தனை பயபக்தியாய் நினைத்துக் கொண்டிருக்கிற நீங்கள் ஏன் இந்த Sheitanக்கும் பலியை செலுத்துகிறீர்கள்?"  என்றதற்கு அவர்கள்,

"உண்மைதான். பலி செலுத்துவது அன்பினால் அல்ல பயத்தால். MAGANOவோடு நெருங்கிய உறவுகளை எங்களால் வைத்துக் கொள்ள முடியாத நிலையில் இப்படிச் செய்தாக வேண்டி இருக்கிறது" என்றார்களாம் பதிலாக.

வியப்பாக இருக்கிறது அல்லவா? இவர்களில் ஒருவன் வித்தியாசமாக யோசித்தான். அவன்தான் இந்த இன மக்களின் அரச குடும்பத்தைச் சேர்ந்த  Warassa Wange. அவன் இருந்த இடம் 'Dilla' என்று அழைக்கப்படுகிற இடம். இந்த "Gedeo" மக்கள் இருக்கும் நிலப்பரப்பில் ஒரு மூலையில், உள்ள ஊர் இது. இவன் ஒருமுறை MAGANO விடம், தமக்கு அவரை வெளிபடுத்தும் படியாக சாதாரண முறையில் ஜெபிக்க ஆரம்பித்தாராம்.

ஆச்சர்யம் என்னவெனில் இந்த எளிமையான ஜெபத்திற்கு உடனடியாக பதில் வந்தது தான். அதிர வைக்கிற வினோதமான தரிசனங்கள் அவனுக்கு வரத் தொடங்கின. அதில் ஒன்றில் முற்றிலும் அறிமுகமேயில்லாத இரண்டு வெள்ளைக்காரர்கள் வந்ததுதான்.

(நமக்கு, நாம் இருக்கிற சூழலின் பின்னணியில் இந்த தரிசனக் காட்சி ஒருவேளை வெகு சாதாரணமாகத் தெரியலாம். சிலருக்கு உயரமான இடம், ஓடுகிற தண்ணீர் போன்றவற்றைக் கண்டாலோ பயம் வருவதைப் போல, சிலருக்கு வெள்ளைக்காரர்களைப் பார்த்தாலே அலர்ஜியாகலாம். இதை Caucasophobia என்பார்கள். இது அதிகமுள்ள பழங்குடி மக்களிடையே இப்படியொரு தரிசனம் என்றால் விஷேசம் தானே?)

Warassa Wange பார்த்த இரண்டு அந்நியமான வெள்ளைக்காரர்களும் 'Dilla' ல் ஒரு அத்திமர நிழலின் கீழ் மெலிதான ஒரு குடிலை முதலில் போட ஆரம்பித்தவர்கள், பிறகு பளபளக்கிற கூரையுள்ள குடில்களைப் போடுகிறார்கள். இந்தக் குடில்களே அந்த மலைப்பகுதி எங்கும் நிறைந்து போகிறது. இதில் விஷேசம் என்னவெனில் அந்த மெலிதான குடிலையோ, பளப்பளக்கிற குடில்கள் எதையுமே நிஜத்தில் அந்த Wange பார்த்ததே கிடையாது. ஏனெனில் "Gedeo"வில் உள்ள எல்லா வீடுகளின் கூரைகளுமே புற்களால் ஆனது. இச்சமயத்தில் அசிரிரீ போல ஒரு குரல் கேட்டதாம் அவனுக்கு. 

"இந்த வெள்ளைக்கார மனிதர்கள் தாம் நீ தேடிக் கொண்டிருக்கிற MAGANO விடமிருந்து உனக்கு ஒரு செய்தி கொண்டு வருவார்கள். எனவே அவர்களுக்காக காத்திரு".

இந்த தரிசனங்களின் இறுதியில் Wange தானே தன் வீட்டில் நடுவில் உள்ள தாங்கு நடு மரக்கோலை அசைத்து பிடுங்குகிறானாம். அவர்களின் கலாச்சாரத்தில் ஒரு வீட்டின் தாங்கு நடு மரக்கோல், அந்த வீட்டின் சொந்தக்கார மனிதனின் வாழ்க்கையைக் குறிப்பதாகும். பின் அவன் அந்த தாங்கு நடு மரக்கோலைத் தூக்கிக் கொண்டு முன்பு பார்த்த அந்த அந்நிய வெள்ளைக்கார மனிதர்களின் பளபளக்கும் கூரை உள்ள குடில்களுக்கு அருகிலேயே மறுபடி நடுகிறானாம்.

யோசிக்கையில் Wange வுக்கு ஒன்று புரிந்தது, இந்த தரிசனத்தில். அவனுடைய வாழ்க்கை இனி இந்த அந்நிய மனிதர்களின் காரியங்களோடு, அவர்கள் தரும் செய்தியோடு, அவர்களை அனுப்பிய MAGANO கடவுளோடு அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டுமென்று உணரலானான்.

Wange, வரப் போகிறவர்களுக்காக காத்திருக்க ஆரம்பித்தான். எட்டு வருஷங்கள் உருண்டோடின. இந்தக் கால இடைவெளியில் அநேக குறி சொல்கிற அவன் இன மக்கள் வந்து, "MAGANO" கடவுளிடமிருந்து அந்நிய மனிதர்கள் வரப்போவதாக அவ்வப்போது சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.

1948 டிசம்பரின் ஒரு உஷ்ணமான நாள். ஊழியக்காரர்களான Albert Brantம், அவரின் உடன் ஊழியரான Glen Cainம் தங்களின் பழைய வண்டி ஒன்றில் அந்தப் பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அவர்களின் நோக்கம் இந்த "Gedeo" மக்கள் மத்தியிலே, அவரின் மகிமைக்கென்று ஊழியங்களைத் துவங்குவது தான்.
எத்தியோப்பியா அதிகாரிகளிடமிருந்து அனுமதிப் பெற்று, "Gedeo" இன மக்கள் வசிக்கிற அந்தப் பகுதியின் மத்தியில் ஊழியத்தைத் துவங்க நம்பிக்கை கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்களின் நண்பர்களில் சிலர் நிலவுகிற அரசியல் சூழ்நிலையினால் அப்படி அனுமதி கிடைக்காது என்று அறிவுறுத்தி இருந்தார்கள். மாற்று ஆலோசனையையும் இப்படியாகச் சொன்னார்கள். ஊழியம் துவங்க அனுமதி கேட்கும் பொழுது, அந்த மக்கள் இருக்கும் பகுதியில், நடுவில் என்று கேட்காமல், அப்பகுதியின் எல்லையில் ஒரு ஓரத்தில் உள்ள 'Dilla' போன்ற பகுதியில் கேட்கச் சொன்னார்கள். அதற்கு எதிர்ப்பும் அதிகமிருக்காது என்பது அவர்களின் கருத்து.


"அதோ.... அதுதான் 'Dilla' என்று நினைக்கிறேன்" என்றபடி தன் பழைய வண்டியை திருப்பினார் Brant. வந்து சேரும் முன்பே வியர்த்துக் கொட்டியது. "மிகவும் உஷ்ணமாயிருக்கிறது ஆல்பர்ட், எங்கேயாவது நிழல் இருக்கிறப் பகுதியைப் பாப்போம்" என்றபடி அவர் பார்வை தேடியதில், தூரத்தில் இருந்த பெரிய அத்திமரம் தெரிய அதை நோக்கி வண்டியை செலுத்தினார்.

தூரத்தில் ஏதோ வண்டி வருகிற சப்தத்தைக் கேட்டு அப்பகுதியிலிருந்த Wange வந்த பொழுது, அத்திமர நிழலின் கீழ் அந்தப் பழைய வண்டி நின்றிருக்க, அதிலிருந்து கீழே இறங்கி நின்றிருந்தனர் வெள்ளைக்காரர்களான Albert Brantம், Glen Cainம்.

தன் தரிசனத்தை நினைவுக்கூர்ந்தவனாய் Wange பிரமித்துப் போய் அவர்களை நோக்கி நடந்தான்...

மூன்று தலைமுறை (தசாப்தம்) கடந்த பிறகு .......(Three Decades=30 years)

Warassa Wange இப்போது "MAGANO" (கடவுளின்) குமாரனான இயேசு கிறிஸ்துவின் தீவிரமான விசுவாசி. வந்த ஊழியக்காரர்களோடு சேர்ந்து இன்றைக்கு அந்த "Gedeo" மக்களின் நடுவே 200க்கும் மேற்பட்ட திருச்சபைகள் உருவாக காரணமானார். ஒவ்வொரு சபையிலும் 200க்கும் மேற்பட்ட விசுவாசிகள் என்றால் எத்தகையதொரு எழுப்புதல், மாற்றம் என்று யோசித்துப் பாருங்கள். இன்றைக்கு இந்த "Gedeo" மக்களில் பெரும்பாலானவர்கள் ஆண்டவரை அறிந்துக் கொண்டவர்கள்.

இவர்களில் முக்கியமான, பலரும் அறிந்திருக்கிற Dake Seriயும் உண்டு. இவரின் கதை வெகு சுவாரஸ்யமானது. கதைகளில் வரும் வினோத சம்பவங்களைப் போல இவரின் மனமாற்றமும், மெல்ல மெல்ல இவரின் பிற மாற்றங்களும் எனலாம். "Gedeo" மக்களின் மாற்றத்திற்கு மட்டுமன்றி, தெற்கு எத்தியோப்பியாவில் உள்ள Guji (Oromo people (or) Oromia Region of Ethiopia) இனமக்களின் மனமாற்றத்திற்கும் காரணமாக இருந்தார். ஆரம்பத்திலேயே மனம் மாறின விசுவாசியாக இருந்த இவர் சபைகளின் முதல் தலைவராகவும் இருந்தார்.

சில மானுடவியலாளர்கள் பொதுவாக சொல்கிற படி 'வானத்திலிருக்கிற கடவுள் தன் செய்தியை கொண்டு வருகிறவர்கள் என்ன செய்தியை சொல்லப் போகிறார்கள் என்று சொல்வதில்லை. ஆனால் சொல்லப் போகிற தூதர்கள் வரப் போகிறார்கள் என்ற செய்தியை மட்டுமே வெளிப்படுத்துகிறார்' எனலாம்.

இதில் "KORO" வின் கதை ஆச்சர்யகரமான விதிவிலக்கு. சரி யார் இந்த KORO? ஆப்பிரிக்காவின் பல Bantu மொழிகளில் "KORO" என்றால் 'படைத்தவர்' என்று அர்த்தமாம். இந்த Bantu பழங்குடிகளில் ஒன்றான Mbaka பழங்குடி மக்கள் "KORO"விடமிருந்து செய்தியை தூதர்கள் கொண்டு வர காத்திருந்தது மட்டுமல்ல; அதில் தங்களுக்கும் முக்கிய பங்கு உண்டு என்றும் கூட நம்பினார்கள்.

மத்திய ஆப்பிரிக்க குடியரசில் உள்ள சிபியூட் (Sibyut) நகர் பகுதியில் Mbaka இன மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். ஊழியக்காரரான Eugene Rosenau Ph.D., தன் தகப்பனாராகிய ஊழியக்காரர் Ferdinand Rosenau தன் சகாக்களுடன் இம்மக்கள் நடுவே ஊழியம் செய்ய வந்தபோது (1920) Mbaka இன மக்கள் அதிகமுள்ள Yablangba கிராம மக்கள் எந்த அளவிற்கு செவி சாய்த்தார்கள் என்று சொல்கிற அனுபவங்களை மெய்சிலிர்க்க கேட்டுக் கொண்டிருந்ததாக கூறுகிறார்.

ஒரு தடவை அவரின் Mbaka நண்பர்கள் அவர்களின் கலாச்சாரத்தில் எப்படியாக, சொல்லப்படப் போகிற சுவிஷேசத்தின் அறிவிப்பை எதிர்நோக்கி பல காரியங்கள் அமைந்துள்ளது என்பதைப் பற்றி பேசும்பொழுதெல்லாம் Eugene சொல்வாராம்...

"உங்களின் Mbaka மூதாதையர்கள், வடக்கு ஐரோப்பாவில் உள்ள எங்களுடைய ஜெர்மானிய மூதாதையர்களை விட அவரின் சத்தியத்திற்கு நெருங்கி இருந்தார்கள்."

சரி. அப்படி என்ன கதைகள்!... இதோ கவனியுங்களேன்.

"KORO எல்லாவற்றையும் படைத்தவர் (அதாவது கடவுள்) நம்முடைய (Mbaka) மூதாதையர்களுக்கு அநேக காலங்களுக்கு முன்பாக சொல்லப்பட்டதாவது... KORO தம்முடைய குமாரனை இந்த சகல மனித குலத்திற்காகவுமே மிகவும் அருமையான, அற்புதமான காரியத்தை நடப்பிக்க இவ்வுலகத்திற்கு அனுப்பினாராம். என்றாலும் நம்மின் இந்த மூதாதையர்கள் KOROவின் குமாரனான அவரின் உண்மைகளுக்கு செவிக்கொடுக்காமல் போனார்கள். அதிலிருந்து, அந்த மறந்து போன காலத்திலிருந்து அதன்பின் வந்த தலைமுறைகள் KOROவின் குமாரனைப் பற்றின (மறந்து போன) உண்மைகளைக் கண்டுபிடிக்க ஏங்கிக் கொண்டிருந்தனர். ஆனால் பின் சொல்லப்பட்ட செய்தி என்னவெனில், மறந்து போன அந்தக் காரியங்களைப் பற்றிச் சொல்ல தூதர்கள் வருவார்கள். அவர்கள் அநேகமாய் வெண்மையானவர்களாய் (நம் புரிதலுக்காக வெள்ளைக்காரர்களாய்) இருப்பார்கள்...

எப்படியோ KOROவின் தூதர்கள் இப்படி வரும்பொழுது, அதை தவறி விட்டு விடாமல், நாங்கள் அவர்களை வரவேற்று அவர்கள் தரும் செய்தியை ஏற்றுக்கொள்கிறோம் என்றார்களாம்.

Eugeneன் தகப்பனார் கண்டுபிடித்த இன்னொரு சுவாரசியமான காரியம் என்னவெனில், Yablangba என்று அழைக்கப்படுகிற அந்தப் பெரிய கிராமத்தில் உள்ளவர்களைப் பற்றி 'KORO கடவுளின் காரியங்களை கவனிப்பவர்கள்' என்று சொல்லப்படுவதுண்டாம்.  (இது கொஞ்சம் குறைய ஆசாரியப் பணி செய்ய பணிக்கப்பட்டிருந்த 'லேவி' கோத்திர மக்களைப் போல அல்லது நம் பகுதிகளில் வழிவழியாய் சில கோவில்களில் தொடர்ந்து பூஜை செய்ய சில கிராமங்களின் சில குடும்பத்துக் குருக்களைப் போல விளங்கிக் கொள்ள முற்படலாம்)

சரி. இப்படி அழைக்கப்படுகிற இவர்கள் சுவிஷேசத்திற்கு செவி கொடுத்தார்களாவென்றால் இன்னொரு ஆச்சர்யமான புள்ளி விவரம் உண்டு.

1950களில் Eugene மற்றும் அவரின் சகாக்களினால் பயிற்றுவிக்கப்பட்ட ஆப்பிரிக்க போதகர்களில் 75லிருந்து 80 சதவீதம் பேர் இதே Yablangba கிராமத்தைச் சேர்ந்தவர்களே!! மட்டுமல்ல, இந்த Mbaka குடிகளின் பழக்கவழக்கங்களில் பல யூத மற்றும் கிறிஸ்துவ (Judeo-Christian) காரியங்களின் சாயலைப் பார்க்கலாம்.

இவர்களின் குழுவில் யாரையாவது சேர்த்துக் கொள்ள, அந்த நபரை நதியில் முழுக்கி விட்டுதான் (நம் ஞானஸ்நானம் போல) சேர்த்துக் கொள்வார்களாம். மட்டுமல்ல இந்த சடங்கிற்குப் பிறகு சேர்த்துக் கொள்ளப்பட்டவர் குழந்தையைப் போல தான் நடந்துக் கொள்ள வேண்டுமாம், சில நாட்களுக்கு. அதாவது புதிதாய் பிறந்ததைப் போல.

இன்னொரு காரியமும் உண்டு, Mbaka இனத்தினன் ஒருவன் கல்லில் தடுக்கி விட்டால், அந்தக் கல்லை எடுத்து, அதை அபிஷேகம் செய்து இப்படியாக சொல்வானாம். "கல்லே சொல், KOROவாகிய கடவுள் உன்னை பயன்படுத்தி என்னை ஆபத்திலிருந்தோ இல்லை தீமையிலிருந்தோ  காப்பாற்றினாரோ?"

நம் வேதாகமத்தில் உவமையாக வரும், 'இடறுவதற்கு ஏதுவான கல்லாகிய கிறிஸ்துவை' இந்த பழக்கத்தோடு ஒப்பிட்டு பார்க்கிறார் Eugene. இப்படியான மேலும் சில பழக்கவழக்கங்களையும் சொல்லிக் கொண்டு போகலாம்.

பின் நாட்களின் மத்திய ஆப்பிரிக்க குடியரசின் பல புகழ் பெற்ற தலைவர்கள் இந்த Mbaka இனத்தைச் சேர்ந்தவர்கள் தாம். இதில் முன்னாள் அதிபதி Jean Bedel Bokassa, ஒரு கத்தோலிக்க பாதிரியாராக தன் வாழ்க்கையைத் துவங்கி, பின் அரசியலில் நுழைந்து, பல சாதனைகளைச் செய்து மிகவும் புகழ் பெற்ற முதல் பிரதம மந்திரியான Barthelemy Boganda வரை பலரை சொல்லலாம்.
சமீபத்தில் 'African Fables'  என்ற புத்தகத்தில் அதன் ஆசிரியர் எப்படி அங்கு காலங்காலமாய் வழங்கி வருகிற பழக்கவழக்கங்கள், சொல் வழக்குகள், கதைகளின் பின்னணி சில புரிதலுக்கு கடினமான வேதவசனங்களையும், எவ்வளவு இயல்பாக விளங்கிக் கொள்ள எதுவாக இருக்கிறது என்பதை அழகாக விளக்குகிறார்.

உதாரணத்திற்கு 'கண்ணீரோடு விதைக்கிறவர்கள், கெம்பீரத்தோடே அறுவடை செய்வார்கள்' என்ற வசனம் நம் சூழலில் பார்க்கும்பொழுது அத்தனை பிடிபடுவதில்லை. விதைக்கும் பொழுது சந்தோஷமும், எதிர்பார்ப்புமாய், மகிழ்ச்சியுமாய்த் தானே விதைப்பார்கள் என்று நாம் யோசிக்க வாய்ப்புண்டு.  ஆனால் 'கண்ணீரினூடே விதைக்கிற ஆப்பிரிக்க விவசாயிகள் பற்றின பின்னணிக் கதை, இந்த வசனத்தை எவ்வளவு அருமையாய் அவர்கள் உள்வாங்கி இருக்கக்கூடும் என்பதை உணர்த்த இது ஒரு மாதிரி தான். இப்படி பல, பல சம்பவங்கள், வழக்கங்களை படிக்கிற பொழுது நம்மால் வியக்காமல் இருக்க முடியாது.

இவைகளைப் பற்றியெல்லாம் அறிய வரும் பொழுது ஆப்பிரிக்காவில் நிகழ்ந்த, நிகழ்ந்து கொண்டிருக்கிற ஒரு பெரிய எழுப்புதலுக்கான பின்புலக் காரணங்கள் மனதில் தோன்றி கொண்டிருக்க, நாம் நினைப்பதற்கும், யோசிப்பதற்கும் அதிகமாய் கிரியை செய்துவரும் அவரை மகிமைப்படுத்தாமல் இருக்க முடியுமா  என்ன?...  அல்லேலூயா!

-எட்வினா ஜோனாஸ்

No comments:

Post a Comment