Monday, November 21, 2016

சரித்திரம் அவரின் சித்திரம் - 3

நமது வேதாகமத்தில் எஸ்தரின் புத்தகத்தில் முதலாம் வசனம் பெர்சிய பேரரசு பற்றி இப்படிச் சொல்கிறது. 'இந்து தேசம் முதல் எத்தியோப்பியா தேசம் வரைக்குமுள்ள 127 நாடுகளையும் (!) அரசாண்ட அகாஸ்வேரு' என்று... இந்த ராஜா பெர்சியா மகாராஜாக்களில் ஒருவர் எனலாம்.

ஒரு விசேஷமான காரியம் என்னவெனில், முக்கியமான பெர்சிய ராஜாக்களான கோரேஸ், தரியு, அர்தசஷ்டாக்கள், அகாஸ்வேருக்கள் இவர்களுக்கு வேத சரித்திரத்தினூடாக இருக்கிற பங்கு கடந்த முறை பார்த்த அசீரிய ராஜாக்களிலிருந்து இவர்கள் மாறுபட்டவர்கள். ஆண்டவரை ஒரு சமயம் அறிய வேண்டிய பிரகாரமாய் அறியாமலிருந்தாலும், அவரின் மகத்துவமான திட்டத்தின் செயல்பாடுகளுக்கு இவர்கள் பயன்பட்ட விதம் வியக்க வைக்கிறது. எஸ்தர், நெகேமியா, எஸ்றா, ஏசாயா, தானியேல் புத்தகங்களில் இவர்களை சந்திக்க முடியும்.

அர்தசஷ்டாவும், அகாஸ்வேரும் நம்மில் பெரும்பாலானோருக்கு பரிச்சயமென்றாலும், தெரியாத விஷயம் என்னவெனில், இந்த இரு பெயர்களில் ஐந்து ராஜாக்கள் இருக்கிறார்கள் என்பது தான்!!!. வேதாகமத்தில் அவர்களை இப்படி வித்தியாசப்படுத்திக் காட்டவில்லை என்றாலும், சரித்திரப்படி அவர்கள் அப்படித்தான்.

நாம் இந்தப் பகுதியில் முக்கியமாகப் பார்க்கப்போகிற கோரேஸ்க்கு முன்பாக, இதைக் கொஞ்சம் பார்த்து விடலாம்.

எஸ்றா 4ம் அதிகாரத்தில் வருகிற அர்தசஷ்டாவும் (வச.7), எஸ்றா 7ம் அதிகாரத்தில் வருகிற அர்தசஷ்டாவும் (வச.1) வேறு வேறு ராஜாக்கள்.

அர்தசஷ்டா - I אַרְתַּחְשַׁשְׂתָּא (ARTAXERXES - I) எஸ்றா 4ம் அதிகாரத்தில் வருகிறவர். கோரேஸ்க்கு பின்பாக, தரியு ராஜாவுக்கு முன்பாகவும் ஆட்சியிலிருந்தவன். அதாவது கி.மு.465 முதல் 424 வரை, இவர் காலத்தில் சிலரின் பேச்சைக் கேட்டு எருசலேம் ஆலயம் கட்ட தடை விதிக்கப்பட்டதை இவருக்குப் பின் வந்த தரியு ராஜா நீக்குகிறார்.
அர்தசஷ்டா - II (ARTAXERXES - II LONGIMENUS) எஸ்றா 7ம் அதிகாரத்தில் மற்றும் நெகேமியா புத்தகத்திலும் வருகிறவர். (கி.மு.404 - 338) எஸ்றாவுக்கும், நெகேமியாவிற்கும் எருசலேம் போய் திரும்பி வர அனுமதித்த ஒரு நல்ல மகா ராஜா, எஸ்றாவின் எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றினார். (எஸ்றா 7: 6, 12, 23).
'அகாஸ்வேரு' என்ற பெயரில் மூன்று ராஜாக்கள் உண்டு. அகாஸ்வேரு - I தானியேல் 9: 1ல் வருகிறார். மேதியனான இந்த அகாஸ்வேரு, மேதியனான தரியு ராஜாவின் தந்தையாகும். அகாஸ்வேரு - II எஸ்றா 4: 6ல் வருகிற இவர் வேறு. கி.மு.529 முதல் 522 வரை ஆட்சியிலிருந்த இவர் கோரேஸின் மகனாக இருந்திருக்கலாம். அகாஸ்வேரு - III (AHASUERUS) இவர் தான் எஸ்தரில் நாம் பார்க்கிற மகா ராஜாவான அகாஸ்வேரு. தானியேல் 11: 2ல் உள்ள தீர்க்கதரிசனப்படி - அதில் வருகிற 4வது ராஜாவாக இவர் இருக்கக்கூடும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

சரி. எதற்கு இந்த விஷயங்களை நாம் தெரிந்து கொண்டு என்னவாகப் போகிறது என்று பலர் நினைக்கவும் கூடும். இவர்கள் வேறு வேறு காலகட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று புரிந்துகொள்ளும் பொழுது தான், நாம் எஸ்ரா, நெகேமியா, எஸ்தர் புத்தகங்களை சரியானபடி விளங்கிக்கொள்ள இயலும்.
இந்த பெர்சிய ராஜாக்களில் வெகு சுவாரஸ்யமான கதையைக் கொண்டவர் கோரேஸ் மகாராஜா (Cyrus) பாபிலோனிய ராஜாவான நேபுகாத்நேச்சார் மூலமாக, வணங்கா கழுத்துள்ள தம் ஜனங்களுக்கு பாடம் கற்றத் தந்தார் ஆண்டவர். அவன் தேவாலயத்தைக் கொள்ளையிட்டு, தானியேல் முதலான யூத இளைஞர்களை சிறைப்பிடித்து, பாபிலோனுக்கு கொண்டுபோக அனுமதித்த ஆண்டவர், இந்த பெர்சிய ராஜாவான கோரேஸ் காலத்தில் யூத ஜனங்களை மறுபடி எருசலேமிற்கு திரும்பப் பண்ணுவதைப் பார்க்கலாம்.
யூத ஜனங்களுக்கு நிகழ்ந்த இந்த 70 வருஷ நிகழ்வுகளில், இரு வேறு காலகட்டத்தில் வாழ்ந்த இரு வேறு சாம்ராஜ்யத்தின் இரு மகாராஜாக்களை, ஒரு வகையில் சதுரங்கத்தில் காய் நகர்த்துகிறதைப் போல, ஆண்டவர் தம் மகத்தான சித்தத்தின்படி எப்படி பயன்படுத்துகிறார் பாருங்கள்.

நல்லது, யார் இந்த கோரேஸ் ராஜா?
பெர்சியப் பேரரசின் முதல் முக்கியமான முதல் ராஜாவான இவர் கி.மு.539ல் தான் உலக சரித்திரத்தில் தன் முத்திரையைப் பதித்தான் என்று சொல்லலாம். ஏனெனில் இந்த கி.மு.539 தான் மகா பாபிலோனிய அரசை ஒரே நாளில் கோரேஸ் வீழ்த்தின வருடம். ஆனால் இப்படி ஒரு ராஜா வரப் போகிறான் என்று, 'ஆண்டவரைப் பற்றி ஏதும்' அறிந்திராத இந்த ராஜாவை முன்னறிவித்தது யார் தெரியுமா? கொஞ்சம் குறைய கோரேஸ்க்கு 150 வருஷங்களுக்கு முன்பிருந்த ஏசாயா தீர்க்கதரிசி தான்.

"...நான் உன்னைப் பெயர்சொல்லி அழைத்து, நீ என்னை அறியாதிருந்தும், உனக்கு நாமம் தரித்தேன்." (ஏசாயா 45: 4)

"கோரேசைக் குறித்து: அவன் என் மேய்ப்பன்; அவன் எருசலேமை நோக்கி: நீ கட்டப்படு என்றும்; தேவாலயத்தை நோக்கி: நீ அஸ்திபாரப்படு என்றும் சொல்லி, எனக்குப் பிரியமானதையெல்லாம் நிறைவேற்றுவான் என்று சொல்லுகிறவர் நான்." (ஏசாயா 44: 28)

இப்படி இந்த ராஜாவினுடைய பெயரை அத்தனை வருஷங்களுக்கு முன்பாக குறிப்பிட்டது மட்டுமல்ல, அவன் செய்யப் போகிற காரியங்களைப் பற்றியும் முன்னறிவிக்கிறார் ஏசாயா.

ஏசாயா தீர்க்கனின் காலம் கி.மு.740 முதல் 680 வரை எனப்படுகிறது. இந்த நாட்களில் பாபிலோனிய பேரரசு கூட உருவாகவில்லை. ஏசாயாவிற்கு பின்பே அது ஆரம்பிக்கிறது (கி.மு.645 முதல் 539). ஆனால் அதற்கு முன்பாகவே அந்த பாபிலோனிய பேரரசை வீழ்த்துகிற கோரேஸ் பற்றின குறிப்புகள் எத்தனை ஆச்சர்யம்!

நேபுகாத்நேச்சாரின் காலத்தை பாபிலோனிய பேரரசின் உன்னதமான காலங்கள் ஆரம்பிக்கிற வருஷங்களாக எடுத்துக் கொண்டால் கி.மு.624லிருந்து அதன் வல்லமை, பராக்கிரமம் அதிகரித்துக் கொண்டே போனது. பல வகைகளிலும் புகழ் பெற்றது. குறிப்பாக ராணுவ பலம். தலைநகரமான பாபிலோன், முக்கிய நதியான யூப்பிரட்டீஸின் நதியோரம் அமைந்ததொன்றாகும்.
பாபிலோனிய ராணுவ பிரதானிகள் இந்த நகரத்தின் கோட்டை அரண்களை எவ்விதமாக வடிவமைத்திருந்தார்கள் எனில், ஓடிக் கொண்டிருக்கும் நதியையே கோட்டையைச் சுற்றி இருக்கிற அகழியைப் போல அமையச் செய்திருந்தார்கள்.
மட்டுமல்ல, நதியின் ஒரு கால்வாய் நகருக்குள்ளும் சென்றது. இன்னும் பெரிய வலுவான வெண்கலக் கதவுகளும் அரண்களில் இருந்தன. இந்த நதி 'அகழி' அமைப்பே எவரும் பாபிலோனைத் தாக்க நினைத்துக் கூட பார்த்துவிட முடியாதபடி மாபெரும் பாதுகாப்பு அரணாக இருந்தது. நதியை ஒட்டின கோட்டைச் சுவரின் அகலம் 21 அடிகளுக்கும் அதிகமாகும். இதைத் தாண்டி, இன்னொரு சுற்று மதில் சுவரும் இருந்தது.
எவரும் நெருங்க யோசிக்கக்கூடத் தயங்குகிற இந்த மகா பிரமாண்டத்தினால் தான் நேபுகாத்நேச்சார் தானியேல் 4: 30ல் 'இது என் வல்லமையின் பராக்கிரமத்தினாலும், என் மகிமைப் பிரதாபத்துக்கென்று, ராஜ்யத்துக்கு அரமனையாக நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா?' என்கிறான்.

எனினும், கோரேஸ் ராஜா, லிடியா, சர்தை போன்ற ராஜ்யங்களை ஜெயித்த பிறகு, இந்த மாபெரும் பாபிலோனுக்கு குறி வைக்கிறான். அந்நேரம் பாபிலோனின் மகா ராஜாவாக இருந்தவன் நேபோனிடஸ். (இவனுடைய மகனான பெல்ஷாத்சார், உடன் ஆளுநனைப் போல, அரண்மனையில் இருந்தான். தானியேல் 5: 1) இந்த பாபிலோனை வெல்ல கோரேஸ் மேற்கொண்ட உத்தி மிகப் பிரசித்தமானது.

பாபிலோனுக்கு வெளிப்புறத்தில், அதற்கு எதிரே ஆனால் சற்றுக் கீழாக இருந்த செயற்கையான ஏரி ராணி நிட்டோகிரிஸ் (Nitocris) ஏரியில், போகும்படியாக, கோட்டையைச் சுற்றி இந்த நதி அகழியில், ஒரே நேரத்தில் ஏராளமான கால்வாய்களை வெட்டி, நதியோட்டத்தை திருப்பிவிட, மிகக் குறைந்து போன ஆழத்தில், கோரேஸின் படைகள் எளிதாகக் கடந்தன. இதில் சுவாரஸ்யம் என்னவெனில், தங்களின் பாதுகாப்பு அரணைப் பற்றின மிதமிஞ்சிய நம்பிக்கையில் அரண்களிலிருந்த மாபெரும் கதவுகளைக் கூட சரியாக அடைக்காதிருந்தார்களாம் பாபிலோனியப் படையினர். நிலைமைகள் கட்டுக்கு மீற முக்கியமான ஒரு பாபிலோனிய தளபதி கட்சி மாற, வெகு சுலபமாக ஒரே நாளில் பாபிலோனிய அரசு வீழ்ந்தது. கோரேஸின் ஆளான மேதியனான தரியு, பெல்ஷாத்சார் கொலை செய்யப்பட்டு விட ராஜாவானான்.

பின்பு இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை பல சரித்திர ஆசிரியர்களும் பதிவு செய்துள்ளனர். என்றாலும், இதில் குறிப்பிடத்தக்க காரியம் என்னவெனில், இப்படி நடக்கப் போவது பற்றின குறிப்புகள் ஏசாயாவிலும் (46: 10, 11), எரேமியாவிலும் (50: 38 / 51: 30 - 32) முன்பாகவே எழுதி வைக்கப் பட்டிருந்ததுதான். 'மர்டக்' என்ற பாபிலோனிய தெய்வமொன்றை வணங்கி வந்த கோரேஸ்க்கு, பாபிலோன் வீழ்ந்த பிறகும், புதிய அரசில் மிக முக்கிய பொறுப்பில் இருந்த தானியேல் தீர்க்கதரிசி, கோரேஸிடமும் மிகுந்த செல்வாக்கு உடையவராய் இருந்தார் (தானியேல் 6: 28).
ஒரு வேளை , கோரேஸிடம், தானியேல் எப்படி கோரேஸ் பிறப்பதற்கு வெகு வருஷங்களுக்கு முன்பாகவே, அது பற்றி ஏசாயா முன்னறிவித்தார் என்றும், அவர் ஜெயிக்கப் போவது பற்றின ஏசாயா மற்றும் எரேமியாவின் குறிப்புகளையும்கூட சொல்லி இருந்திருக்கக் கூடும். விளைவு...

கோரேஸின் இந்த ஆச்சர்யமான அறிக்கை, அதுவும் அவனுடைய முதலாம் வருஷத்திலேயே!
"பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் பூமியின் ராஜ்யங்களையெல்லாம் எனக்குத் தந்தருளி, யூதாவிலுள்ள எருசலேமிலே தமக்கு ஆலயத்தைக் கட்டும்படி எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்." 
(2நாளாகமம் 36: 22 & எஸ்றா 1:2) என்கிறான்.

(இந்த இடத்தில் ஏசாயா 44: 28ஐ நினைவுகூர்வது நல்லது).

கோரேஸு டைய இந்த அற்புதமான அறிக்கை எஸ்றா 1: 2-4ல் உண்டு. மட்டுமல்ல, பாபிலோன் ராஜா எடுத்துக் கொண்டு போன தேவாலயத்து பாத்திரங்களை எல்லாம் திரும்பக் கொடுக்கிறான். ஒப்படைத்தது யாரிடம் தெரியுமா?

பாபிலோனுக்கு சிறைப்பிடித்துக் கொண்டு போகப்பட்ட யூதாவின் ராஜாவான யோயாக்கீனுடைய மகனாகிய சேஸ்பாரிடத்தில் (SHESHBAZZAR שֵׁשְׁבַּצַּ֔ר ) தான். இதன் விசேஷம் என்னவெனில் தலைமைப் பொறுப்பு மீண்டுமாக தாவீதின் வம்சாவளியினரான ஒருவரிடமே சேர்வது தான். இவரைத் தொடர்கிற செருபாபேலுமே (Zerubbabel זְרֻבָּבֶל ) இந்த தாவீதின் வழியினனாக இருப்பதைக் கவனிக்கலாம்.
இந்த நேரத்தில் சிலருக்கு இன்னொரு சந்தேகம் எழ வாய்ப்புண்டு. கண்டெடுக்கப்பட்ட கோரேஸின் உருளையில் (Cyrus Cylinder) உள்ள விவரங்கள் எதிர்மாறாக இருக்கிறதே, பெற்ற எல்லா வெற்றிகளுக்கும் மர்டுக் தேவனை சிலாகித்து இருப்பதாக அல்லவா சொல்கிறார்கள் என்று கேட்கவும்கூடும்.

சத்திய வேதத்தில், கோரேஸின் வார்த்தைகள் பற்றி இத்தனை தீர்க்கமாய், தெளிவாய் இருந்தும், கோரேஸின் உருளையில் அப்படி இருக்கக் காரணம், அதை உருவாக்கின பாபிலோனிய பூசாரிகளின் பிரச்சாரம் என்கிறார் எமில். ஜி. கிரிச் (Emil G. Hirsch) என்கிற ஆராய்ச்சியாளர்.
ஏனெனில் கோரேஸுடனான போரில் ஜெயிப்பதற்காக நெபோனிடிஸ், பாபிலோனின் எல்லா தெய்வங்களையும் சேர்ந்து தன்னிடம் வைத்துக் கொண்டிருந்தும், தோற்றுப்போய் விட, இதை ஈடுகட்ட கோரேஸின் வெற்றிக்கு 'மர்டுக்' தேவனை பிரதானப்படுத்துகிற முயற்சி தான் இது என்கிறார் இவர். யூத ஜனங்களைத் திரும்ப அனுப்ப கோரேஸ் பிறப்பித்த அரசாணை கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. அதன் விவரங்கள் உண்மையைக் கோடிட்டுக்காட்டக் கூடும் (எஸ்றா 6: 3 - 5). இந்த கோரேஸ் ராஜாவின் கல்லறை இன்றைக்கும் பாசர்கடேயில் உண்டு. அவனைப் பற்றின விசேஷமான வாசகங்களோடு!
"உமது நாமத்தை எல்லாத் தலைமுறைகளிலும் பிரஸ்தாபப்படுத்துவேன்..." (சங்கீதம் 45: 17)

-எட்வினா ஜோனஸ் 
கட்டுரைக்கு உதவின நூல்கள்:
1. Insight of the Scriptures - Vol 1 & Vol 2
2. The Bible and Archaeology by J.A.Thompson
3. The Living Word of the Old Testament by B.W.Anderson

Friday, November 18, 2016

சரித்திரம் அவரின் சித்திரம் - 2


வேதாகமத்தில் வருகிற சரித்திரத் தகவல்களை அணுகி, ஆராய்ந்து என்ன ஆகப் போகிறது? தெரிந்து என்ன பயன்? முடிந்தவைகள், ஒளிந்து கொண்டிருப்பவைகள் பற்றின அலசல் எதற்காக? என்றெல்லாம் கேள்விகள் நம்மில் பலரின் மனதிலும் எழுவது இயல்பானதுதான். சென்ற வலைப்பதிவில் தானியேலையும், பாபிலோனிய ராஜாக்கள் பற்றியும் படித்துவிட்டு பலர் இப்படியாகக் கேட்கவும் செய்தனர்.

ஆனால் ஒரு மலை முகப்பின் உச்சியில் நின்று பார்க்கும்பொழுது விரியும், பரந்திருக்கும் காட்சிகளில் பரவசமாகிற பொழுதோ, கண்கள் திகட்ட பசுமையாய் அடர்ந்திருக்கிற கானகக் காட்சிகளில் லயிக்கிற பொழுதோ, கடலினுள் வாழும் விசித்திர நீர் ஜந்துக்களை வினோத மீன் வகையறாக்களை சிலாகிக்கும் பொழுதோ இவைகளைப் படைத்த ஆண்டவரைப் பற்றின சிலிர்ப்பு நமக்குள் துளிர்த்து அவரைத் துதிக்க வைப்பதைப் போல, இந்த உலக சரித்திரத்தினூடாக நாம் கண்டறிய முடிகிற அளவில் கரம், சித்தம், செயல்பாடுகள், ஊன்றிக் கவனிக்கையில் சிலிர்க்க வைக்கின்றன. அவர் சித்தம் செயல்பட புறஜாதி ராஜாக்களின் சில சரித்திர நிகழ்வுகள் பயன்படுவது, நம் விசுவாச வேர்கள் புத்துயிர் பெற ஏதுவாக இருக்குமென்று நாம் நம்பலாம்.


வேதாகமத்தில் வருகிற இன்னொரு முக்கியமான பேரரசு அசீரியர்களுடையது. அநேக வருஷங்களுக்கு முன்பாக, நம் பழைய ஏற்பாட்டு புத்தகங்களில் வருகிற இந்த அசீரிய ராஜாக்கள் பலரையும், உலக சரித்திரப் படி அடையாளப்படுத்த முடியாதென்றும், புராண பாத்திரங்கள் போலதான் என்றும் பல அறிஞர்கள் கூறி வந்தனர். உதாரணத்திற்கு ஏசாயா 20: 1ல் மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கிற 'சர்கோன்' ராஜா, அசீரிய சரித்திரத்திலேயே இல்லை என்றார்கள்.
ஆனால் நடைபெற்றுக் கொண்டிருக்கிற அகழ்வு ஆராய்ச்சிகளும், தொல்பொருள் ஆய்வுகளும் வேதாகமத் தகவல்களின் துல்லியதையும், மெய்மையையும் நிரூபித்துக் கொண்டு வருகின்றன.

அசீரியா. இந்த பெயர் நோவாவின் மகனான சேமின் மகனான அசூரின் வழித்தோன்றல்கள் மூலம் ஏற்பட்டிருக்கக்கூடிய நாடாக இருக்கலாமென்று குறிப்புகள் உண்டு.

இன்றைய ஈராக்கின் வடக்குப் பகுதியில் தான் அந்நாளில் அமைந்திருந்தது அசீரிய பேரரசு. இதன் பல நிகழ்வுகளை நம் வேதாகம சம்பவங்களோடு அழகாகப் பொருத்திப் பார்க்க முடியும். குறிப்பாக கி.மு.900 முதல் கி.மு. 600 வரை அமைந்திருந்த புதிய அசீரிய ராஜாக்களின் காரியங்களை நம் வேதத்தில் வருகிற பல நிகழ்வுகளில் பொருத்திப் பார்க்க வாய்ப்புண்டு. இந்த காலகட்டத்தில் தான் அவர்களின் அரசு விரிவடைந்து மத்திய தரைக்கடல் பகுதியைக் கடந்து, பாலஸ்தீனம் வரை நீண்டு, எகிப்தையுமே தொட்டது. இவர்கள் தாம் இஸ்ரேல் தேச வடக்கு பகுதியை ஒழித்து சமாரியாவைப் பிடித்து, அங்கு தம் மக்களைக் குடியேற்றினார்கள். பிறகு அவர்கள் யூதாவின் மேல் கவனத்தைத் திருப்பின பொழுது பாபிலோனிய ராஜாக்களின் கை ஓங்கி கி.மு.612ல் அவர்களிடம் தோற்றுப்போனார்கள்.
சமீப வருஷங்களில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த அசீரிய ராஜாக்களின் பதிவுகளான அந்தந்த ராஜாக்களின் குறிப்புகளும், அரசின் பொதுவான நிகழ்வுக் குறிப்புகளும் வேதாகம குறிப்புகளோடு அதிசயிக்கத்தக்க வகையில் ஒத்துப் போனது ஆராய்ச்சியாளர்களை பிரமிக்க வைத்தது. ராஜாக்களின் பெயர்களைக் குறிப்பிடுவதில்கூட வித்தியாசம் இல்லை. நாம், (கிறிஸ்தவர்கள்) பல தடவைகளிலும் வேதாகம சரித்திர காரியங்களை மிகவும் இயல்பானதாக எடுத்துக்கொண்டாலும், வேதத்தை அறிந்திராத / நம்பாத பல ஆராய்ச்சியாளர்கள் அந்த நாட்களின் சரித்திரங்கள் பற்றின வேதாகமக் குறிப்புகள் மிகவும் ஆச்சரியகரமான வகையில் உண்மையாக இருப்பதை சிலாகிக்கிறார்கள்.

வேதாகமத்தில் காணப்படுகிற அசீரிய ராஜாக்கள்:
  1. (மூன்றாம்) திகிலாத் பிலேசர் - கி.மு.745 - 725 (2இராஜாக்கள் 15: 19, 29, 16: 7, 10, 1நாளாகமம் 5: 6, 26, 2நாளாகமம் 28: 20)     
  2. (ஐந்தாம்) சல்மனாசார் (שַׁלְמַנְאֶסֶר) - கி.மு.726 - 722 (2இராஜாக்கள் 17: 3, 18: 9
  3. (இரண்டாம்) சர்கோன் - கி.மு.721 - 705 (ஏசாயா 20: 1)
  4. சனகெரிப் (סַנְחֵרִיב) - கி.மு.704 - 681 (2இராஜாக்கள் 18: 13, 19: 16, 20, 36, ஏசாயா 36: 1, 37: 17, 21, 37, 2நாளாகமம் 32: 1, 2, 9, 10, 22)  
  5. எசரத்தோன்( אֵסַר חַדֹּן) - கி.மு. 680 - 669 (2இராஜாக்கள் 19: 37, ஏசாயா 37: 38, எஸ்றா 4: 2
இவர்களைத் தவிரவும் சில அசீரிய ராஜாக்களின் பங்கு மறைமுகமாய் உண்டு. முதலாம் திகிலாத் பிலேசரில் அசீரிய அரசு ஆரம்பிக்கிறது எனலாம். இந்த காலகட்டம் கி.மு.1100 முதல் 900 வரை தொடர்கிறது. இதில் அசீரியா அரசு மிகவும் அடங்கின நிலையில் இருந்ததாம். இந்த காலகட்டங்கள் தாம் தாவீது ராஜாவும், சாலொமோன் ராஜாவும் முழுவீச்சில் இருந்த நாட்களாகும். அதே போல யோனா போய் அசீரியாவின் தலைநகரான 'நினிவே'யில் பிரசங்கித்து பெரும் மனமாற்றம் வந்ததை வேதாகமத்தில் படிக்கிறோம்.அந்தச் சம்பவம் நிகழ்ந்திருக்கக்கூடிய கி.மு.9ம் நூற்றாண்டில் (கி.மு.848ல்) ஆட்சியில் இருந்தவன் அநேகமாக மூன்றாம் அடாட் நிராரி என்கிறார்கள்.
இதை உறுதிப்படுத்த ஆதாரங்கள் குறைவு என்றாலும், ஒரு சுவாரஸ்ய குறிப்பு இதை உறுதிப்படுத்துவதைப் போல உள்ளது. போரிடுவதை ஒரு மதத்தைப் போல, தொழிலைப் போல கையாளுகிற அசீரிய ராஜாக்களின் வரிசையில் இந்தக் காலகட்டம் மட்டுமே மிகமிகக் குறைந்த அளவாக அந்த உக்கிரம் இருந்ததாம்.

மூன்றாம் திகிலாத் பிலேசர் - பிற்கால அசீரிய பேரரசை நிறுவியவர் என்று இவனைச் சொல்லலாம். வெற்றிபெற்ற பகுதிகளைத் தக்க வைத்துக்கொள்ள அநேகம் நடவடிக்கைகளை மேற்கொண்டான் இவன். அதில் முக்கியமானதொன்று, ஒரு பட்டணத்தைப் பிடித்தபிறகு, அதில் உள்ளவர்களைத் துரத்திவிட்டு, தன் மக்களைக் குடியேற்றுவது. இவனுக்குப் பின் வந்த ராஜாக்களும் இந்த யுக்தியையே பின்பற்றினார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. வேதாகமத்தில் உள்ள குறிப்புகளை உறுதி செய்வதைப் போல, இவனுடைய ஆண்டுக் குறிப்புகள் உள்ளன.

மூன்றாம் திகிலாத் பிலேசரின் ஆண்டுக் குறிப்பு:
இஸ்ரேலையும், அங்குள்ள அனைவரையும் அவர்களின் பொருட்களோடு அசீரியாவுக்கு கொண்டு போனேன். அவர்கள் தங்கள் ராஜாவாகிய பெக்காவை தூக்கி எறிந்தார்கள். அவனுடைய ஸ்தானத்தில் நான் ஒலிசியாவை அவர்களுக்கு ராஜாவாக்கினேன். 1000 தாலந்து வெள்ளியை கப்பமாகக் கொடுத்தார்கள். ANET 28.
வேதாகமப்பகுதி: 2 இராஜாக்கள் 15
இஸ்ரவேலின் ராஜாவாகிய பெக்காவின் நாட்களில், அசீரியாவின் ராஜாவாகிய திகிலாத்பிலேசர் வந்து, ஈயோனையும், பெத்மாக்கா என்னும் ஆபேலையும், யானோவாகையும், கேதேசையும், ஆத்சோரையும், கீலேயாத்தையும், கலிலேயாவாகிய நப்தலி தேசமனைத்தையும் பிடித்து, குடிகளைச் சிறையாக அசீரியாவுக்குக் கொண்டுபோனான். ஏலாவின் குமாரனாகிய ஒசெயா ரெமலியாவின் குமாரனாகிய பெக்காவுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, அவனை உசியாவின் குமாரனாகிய யோதாமின் இருபதாம் வருஷத்தில் வெட்டிக்கொன்றுபோட்டு, அவன் ஸ்தானத்தில் ராஜாவானான். (2இராஜாக்கள் 15: 29, 30)

ஐந்தாம் சல்மனாசார் - அரசாண்ட நாட்களில், சில புதிரான காரணங்களினால், ஓசெயா, அசீரியா ராஜாவுக்கு விரோதமாக எழும்பின பொழுது, சல்மனாசார், அவனைத் தோற்கடித்து சிறைபிடித்து, சமாரியவை முற்றுகையிட்டான். சிறைபிடித்துக் கொண்டு போன இஸ்ரவேல் ஜனங்களை கோசான் நதியோரமான ஆலாகிலும், ஆபேரிலும் மேதியரின் பட்டணங்களிலும் குடியேற்றினான். 2இராஜாக்கள் 18: 9-11ல் உள்ள இந்தக் காரியங்கள் பாபிலோனிய நிகழ்வுக் குறிப்புகளிலும் காணப்படுகிறது.

(இரண்டாம்) சர்கோன் - என்பவனைப் பற்றின குறிப்பு வேதாகமத்தைத் தவிர (ஏசாயா 20: 1) மற்ற சரித்திர பதிவுகளில் இல்லாமலிருந்ததால் இப்படி ஒரு ராஜாவே இல்லை என்று சொல்லி வந்தார்கள். ஆனால் ஈராக்கில் நடைபெற்ற ஒரு புதைபொருள் ஆராய்ச்சியில் இந்த சர்கோன் கட்டிய மிகப் பிரமாண்டமான அரண்மனையைக் கண்டுபிடித்தார்கள்.

சர்கோனைப் பற்றின கல்வெட்டுக் குறிப்பு:
திடீரென்று வந்த கோபத்தில், நான் வேகமாகக் கடந்துபோய், என்னுடைய ரதம் தவிர, என்னுடைய சொந்தப் படையுடன் ஆஸ்தோத்திற்கு விரோதமாய் போய் அஸ்தோத், காத், அஸ்டுடிம்மு பட்டணங்களைக் கைப்பற்றினேன்.  ANET P 286.
வேதாகமப் பகுதி: ஏசாயா 20: 1
தர்த்தான், அசீரியா ராஜாவாகிய சர்கோனாலே அனுப்பப்பட்டு, அஸ்தோத்துக்கு வந்து, அஸ்தோத்தின் மேல் யுத்தம்பண்ணி, அதைப் பிடித்த வருஷத்திலே... (ஏசாயா 20: 1).

சனகெரிப் ராஜா - அசீரிய ராஜாக்களின் வரிசையில் பலரும் அதிகமாய் தெரிந்து வைத்திருப்பதற்கு காரணம் எசேக்கியா ராஜாவுக்கு அவன் விட்ட சவால் ஆகும். கி.மு.704 முதல் 681 வரை அரசாண்ட இவன், அசீரிய சாம்ராஜ்யத்தை மிகவும் விரிவாக்கினவன். இவன் கி.மு.701ல் யூதா மீது படையெடுத்து வந்த சம்பவங்களைத்தாம் நாம் ஏசாயா 36, 37 அதிகாரங்களில், 2நாளாகமம் 32ல், 2இராஜாக்கள் 18, 19ல் மிகவும் விரிவாகப் பார்க்கலாம். முன்பாக எசேக்கியா கொடுத்த வெகுமானங்களையும் பொருட்படுத்தாதபடிக்கு தேவனாகிய கர்த்தரை நிந்தித்ததாக வேதாகமக் குறிப்பு உள்ளது. விளைவு? தேவதூதன் அடிக்க, 1,85,000 அசீரியப் படையினர் சங்கரிக்கப்பட்டனர்.

மிகப் பயங்கரமான இந்த 'சம்பவம்' நடந்ததொன்று தானா? நடந்தது பற்றி வேறு எங்காகிலும் குறிப்புகள் உண்டா? என்று கேட்பதுண்டு.

சனகெரிப்பின் ஆண்டுக் குறிப்புகளில் எசேக்கியா தந்த வெகுமானம் பற்றின குறிப்புகள், கொடுக்கப்பட்ட சந்தர்ப்பம் தவிர, மற்ற பல விஷயங்களோடு, வேதாகமத்தில் கூறப்பட்டவைகளோடு ஒத்துப்போனாலும், நடந்த 'மாபெரும்' சங்காரம் பற்றி ஏதும் தகவல்கள் இல்லை. மாறாக சனகெரிப்பின் வெற்றி (?) மிகவும் மிகைப்படுத்தப்பட்டிருக்கிறது. இதில் விசேஷம் என்னவென்றால் இந்த வெற்றி (?)க்கு பிறகு அவன் 'யூதா' பக்கம் திரும்பவில்லை என்பதுதான். இதற்கும், அதற்குப் பிறகு 20 வருஷங்கள் அரசாண்ட பிறகும்.

'இந்த தேவதூதன் சங்காரம்' பற்றி யூத சரித்திர ஆசிரியர் ஜோஸிபஸ் குறித்திருக்கிறார்.

சனகெரிப் ராஜாவின் தளபதி ரப்சாகே தலைமையில் முற்றுகையிட்டபொழுது ஒரு பெரிய வாதை அசீரியப் படையைத் தாக்கி 1,85,000 பேர் மரித்தார்கள் என்று சிலர் ஷீராடோட்டஸின் ஒரு விசித்திர சரித்திரக் குறிப்பை காட்டுகிறார்கள். ஒருநாள் இரவில் மிக ஏராளமாய், எக்கச்சக்கமாய் வயல் எலிகள் புகுந்து முழு அசீரிய படைகளையும் முடக்கிப்போட்டது... இது பற்றியதாக இருக்கலாமென்கிறார்கள்.

அசீரிய ராஜா எசரத்தோன் (Esarhaddon אֵסַר חַדֹּן) பதவிக்கு வந்ததை, வந்த சூழ்நிலையை வேதாகமத்தில் குறிப்பிடுவதைப் போலத்தான் அசீரியர்களின் நிகழ்வுத் தொகுப்பும் சொல்கின்றன. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
தேவனை அறிந்திராத இந்த மகா ராஜாக்களையும் தம் சித்தத்தை நிறைவேற்ற எப்படிப் பயன்படுத்தினார் என்பது ஆழ்ந்து கவனிக்கையில் சிலிர்ப்பூட்டாமல் இருக்க இயலாது. மட்டுமல்ல, வேத வசனங்களின் துல்லியம் நினைக்க... நினைக்க... பிரமிப்புக் குன்றாத ஒரு அற்புதம்!
இப்போதும் ராஜாக்களே, உணர்வடையுங்கள், பூமியின் நியாயாதிபதிகளே, எச்சரிக்கையாயிருங்கள்.- சங்கீதம் 2: 10
-எட்வினா ஜோனஸ் 
கட்டுரைக்கு உதவின நூல்கள்:
1. Archaeology and Biblical Research - Vol: 4, No: 2
2. Insight of the Scriptures - Vol I & II