Monday, March 13, 2017

சரித்திரம் அவரின் சித்திரம் - 4

சரித்திரத்தின் பக்கங்களினூடாக செயல்பட்டு வருகிற நம் தேவன் தம் மேலான சித்தத்தின்படி, தேவ திட்டத்தின்படி ராஜாக்களை ஏற்படுத்தி, ராஜாக்களைக் கவிழ்த்துப் போடுகிற அவரின் செயல்பாடுகளை ஒவ்வொரு 'பேரரசு' பற்றியும் நாம் அறிந்து கொள்வதின் மூலம் அவதானித்து வருகிறோம்.

அவரின் செயல்திட்டம் பற்றின ஒரு தீர்க்கதரிசன அறிக்கைப் போல தானியேலின் புத்தகத்தில் நிறைய குறிப்புகள் உண்டு. பாபிலோனிய பேரரசன் நேபுகாத்நேச்சாரின் காலத்தில் வாழ்ந்த தானியேல் அதற்குப் பின்பு வரப்போகிற மேதிய - பெர்சிய ராஜாக்கள் பற்றியும், கிரேக்க ராஜாக்கள் பற்றியும் கூட துல்லியமான தீர்க்கதரிசனங்கள் கூறி இருக்கிறார்.

ஆனால் இதற்கு முன்பு பார்த்த அசீரிய, பாபிலோனிய, மேதிய, பெர்சிய ராஜாக்கள் வேதாகமத்தில் உள்ள அநேக சம்பவங்களோடு தொடர்புள்ளவர்களானதால் பலரும் இவர்களை அறிந்திருக்கக் கூடும். ஆனால் நாம் பார்க்கப்போகிற கிரேக்க ராஜாக்கள் பற்றி அப்படியாக நாம் பார்க்க முடியாது. மகா அலெக்ஸாண்டரைத் தவிர மற்ற ராஜாக்கள் பற்றி மறைமுகக் குறிப்புகள் உண்டு.

என்றாலும் தள்ளுபடி வேதாகமத்தில் உள்ள மக்கபேயர்கள் அலெக்ஸாண்டரைப் பற்றின குறிப்புகளுடன் தான் ஆரம்பிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மகா அலெக்ஸாண்டர் நமக்கு, நம் இந்திய மக்களுக்கே பரிச்சயமானவர்தான். இந்தியாவிற்குள் கால் பதித்த அவனைப் பற்றி பள்ளிப்பிள்ளைகளுக்குக் கூடத் தெரியும். ஆனால் இப்படிப் புகழ் பெறுகிறவனாய் மகா அலெக்சாண்டர் தோன்றப் போகிறான் என்று தானியேல் சொன்னதுதான் பலருக்கும் தெரியாத ஒன்று. மகா பெரிய பெர்சிய சாம்ராஜ்யம் வீழ்ந்து, கிரேக்க சாம்ராஜ்யம் வரப் போவது பற்றியும் வேதாகமக் குறிப்புகள் உண்டு.
எஸ்தர் புத்தகத்தில் வருகிறபடி 127 நாடுகளை ஆண்டு வந்த மகா ராஜாவான அகாஸ்வேருவின் தகப்பனான தரியு கி.மு. 490ல் மிகப்பெரிய ராணுவத்துடன் கிரேக்கத்தின் மேல் படையெடுத்தான். ஆனால் இந்தப் பெரிய படையை அத்தேனியர்களைக்(Athenians) கொண்ட சிறிய கிரேக்கர்களின் படை மராத்தன்(Marathon Valley) சமவெளியில் முறியடிக்கிறது. 
இந்தத் தோல்விக்கு பழிவாங்க அகாஸ்வேரு முயற்சிப்பது பற்றி தானியேல் 11: 2ல் குறிப்பு உண்டு. அகாஸ்வேருவின் மகா பெரிய ராணுவம் கி.மு. 480ல் மீண்டும் கிரேக்கத்திற்குள் நுழைய முயன்றது. தரை வழியில் முன்னேறி ஏதென்ஸை நெருங்கி அதன் கோட்டையை எரித்தாலும், கடற்பகுதியில் பெரும் தோல்வியை சந்திக்க நேரிட்டது. பின் தோல்வி தரைப் பகுதியிலும் பெர்சியப் படைகளுக்குத் தொடர, அது பின் வாங்கிப் போயிற்று. இதை நாம் தானியேலின் தீர்க்கதரிசனப் படியே' என்று முடிக்கலாம், இந்த 'அதிசயமான' தோல்வியைப் பற்றி குறிக்கும் பொழுது...
மாரத்தன் போர்க்களத்தின் முதல்நிலை விளக்கப்படம் 
மாரத்தன் போர்க்களத்தின் இரண்டாம்நிலை  விளக்கப்படம் 
மட்டுமல்ல தானியேல் 11: 3ன்படி 'பராக்கிரமமுள்ள ஒரு ராஜா எழும்பி, பிரபலமாய் ஆண்டு தனக்கு இஷ்டமானபடி செய்வான்' என்ற குறிப்பின்படி அலெக்சாண்டர் உலகை வியக்க வைக்கிற, கிரேக்க பேரரசின் மகா ராஜாவாக வருகிறான்.
புகழ்பெற்ற யூத சரித்திர ஆசிரியர் ஜோசிபஸ்ஸின் குறிப்புகளின்படி கி.மு. 332ல் 'யூதேயா'வை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த பிறகு எருசலேமில் நுழைந்திருந்த அவனிடம் அவன் இப்படி எழும்பப் போவது பற்றின தானியேலின் தீர்க்கதரிசன விவரங்களைக் காட்டின பொழுது வியந்து போன அவர், யூதர்களுக்கு நிறைய சலுகைகளை வழங்கினாராம்.

ஆனால் அலெக்சாண்டரின் முடிவு பற்றி, அதன்பின் நிகழ்கிற காரியங்கள் பற்றின தானியேலின் வார்த்தைகள் கூறப்பட்டதுண்டோ என்பது பற்றி நமக்குத் தெரியாது. ஆனால் தானியேல் 8:20-22ல், தானியேல் 11:4ல் சொல்லப்பட்டிருக்கிறபடியே அலெக்சாண்டருக்குப் பிறகு, கிரேக்க சாம்ராஜ்யம் அவனுடைய நேரடி குடும்ப வாரிசுகளுக்கு இல்லாதபடி, அவனின் நான்கு தளபதிகளுக்கிடையில் பிரிக்கப்பட்டுப் போனதை, நாம் உலக சரித்திரத்திலிருந்தும் அறிந்து கொள்கிறோம். இவர்களில் டோலமி (Ptolemy) வழியில் வந்த டோலமி ராஜாக்களும், செலுக்கஸ் (Seleucus) வழி வந்த செலுக்கஸ் ராஜாக்களும் நமது வேத சரித்திரத்தோடு தொடர்பு உடையவர்கள் எனலாம்.

நமது வேதாகமத்தில் மல்கியா தீர்க்கதரிசியின் காலத்திற்கும், புதிய ஏற்பாடு ஆரம்பிக்கிற காலத்திற்குமான இடைவெளியில் இருந்த சரித்திர காரியங்கள் இல்லை. இந்த காலகட்டத்தில் பிரதானமாய் ஆண்டு வந்த கிரேக்க சாம்ராஜ்யத்தின் ராஜாக்களான டோலமிகளும், செலுசிட்களும் கி.மு. முதலாம் நூற்றாண்டில் தங்கள் வலுவை இழக்கிறார்கள். கி.மு. 30ல் டோலமி ராஜாக்களிடமிருந்து எகிப்து பகுதியையும், கி.மு. 63ல் எருசலேமையும், செலுசிட் ராஜாக்களிடமிருந்து கி.மு. 63ல் சீரியா பகுதிகளையும் ரோமர்கள் கைப்பற்ற ரோம சாம்ராஜ்யம் ஆரம்பிக்கிறது எனலாம்.
ஆனால் இந்த காலகட்டத்திலும் தேவனுடைய செயல்பாடுகளை 'அப்போகிரிப்பா'வில் நாம் வைத்திருக்கிற மக்கபேயர்களின் புத்தகங்களின் வாயிலாக நாம் கண்டுணர முடியும். மக்கபேயர்களின் காலம் செலுசிட் அல்லது செலுக்கஸ் ராஜாக்களின் காலத்திற்குள் வருகிறது. (இதை அட்டவணையில் யோனாத்தான் (Jonathan Apphus  יונתן הוופסי), சிமியோன் (Simon Thassi  שמעון התרסי), யோவான் ஹைகிரேனஸ் (John Hyrcanus יוחנן הורקנוס)... காலங்களை பார்க்கையில் புரியலாம்). மக்கபேயர்களின் கலகம் ஆரம்பித்த கி.மு. 167ல் அரசாண்டவன் நான்காம் அந்தியோகஸ் அல்லது அந்தியோகஸ் எபிபேனஸ் (Antiochus IV Epiphanes) என்று அழைக்கப்படுகிற செலுசிட் ராஜாவாகும். இவன்தான் எருசலேம் தேவாலயத்திற்குள் பன்றியை பலியிட்டு தீட்டுப்படுத்தினவன். மக்கபேயர்களின் முதல் தலைவனான  (יהודה המכבי) யூதாஸ் மக்கபேயுஸ் (Judas Maccabeus) அப்போது தான் இந்த செலுசிட் ராஜாவுக்கு எதிராக எழும்பின யூத ஜனங்களை முன்னின்று நடத்தினவன். இதற்கு பின் வந்த பல மக்கபேய தலைவர்கள் கி.மு. 166லிருந்து கி.மு. 104 வரை போராடி வந்தனர் எனலாம். ஆனால் கி.மு. 128ல் இவர்கள் சீகேமைக் கைப்பற்றி ஓரளவு தங்கள் நிலையை ஸ்திரப்படுத்திக் கொண்டனர்.
மல்கியாவில் 'மேசியா' பற்றின தீர்க்கதரிசனம் உண்டு... பல்வேறு சாம்ராஜ்யங்களின் நுகச்சுமைகளுக்கு உட்பட்ட ஜனங்கள், தங்களை விடுவிக்க வரப்போகிற 'மேசியா'வை எதிர்நோக்கி காத்திருக்கிற எதிர்பார்ப்புகள், ஏசாயாவிலிருந்து அநேக தீர்க்கதரிசிகள் 'மேசியா' பற்றி முன்னுரைத்தவைகளை மனதில் தேக்கிக் கொண்டு எழும்பின எதிர்பார்ப்புகள், யூத மக்களிடையே இருந்து வந்தது என்பது இங்கு நினைவுகூரத்தக்கது. உதாரணத்திற்கு மக்கபேயர்களின் புரட்சியின் போது, அதன் தலைவனை மேசியாவோ என்று நினைக்க ஆரம்பித்ததாக நமக்கு குறிப்புகள் (இந்த நினைப்பு தவறாகிப் போனது நாம் அறிந்ததுதான்).
இதில் ஒரு சுவாரஸ்யம் என்னவெனில், தள்ளுபடி ஆகமங்களில் தானே இந்த குறிப்புகள் என்று நம்மில் பலர் நினைக்கக்கூடும்... என்பதாலோ என்னவோ தானியேல் 11ம் அதிகாரம் அநேகமாக இந்த கிரேக்க ராஜாக்கள் பற்றின தீர்க்கதரிசனங்கள் நிறைந்த பகுதி என்பது தான் விசேஷம். 

முதலாம் டோலமி தெற்கு பகுதியின் பலம் பொருந்திய ராஜாவாக, அதுவும் முதலாம் செலுக்கஸை விட (வட பகுதியின் ராஜா) இருப்பதிலிருந்து, அதில் மெசபொடேமியாவும், சிரியாவுமே இருப்பதிலிருந்து (தானியேல் 11: 5) இரண்டாம் டோலமி செலுசிட் ராஜாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி இரண்டாம் அந்தியோகஸ்க்கு தன் மகள் பெர்னிசை திருமணம் செய்து வைக்க, இதில் ஆத்திரமான அந்தியோகஸின் பழைய மனைவி சதி செய்து ராஜாவையும், புதுமனைவியையும் கொலை செய்வதிலிருந்து, இதனால் ஆத்திரமடைந்த மூன்றாம் டோலமி தன் சகோதரி பெர்னிஸ் கொலை செய்யப்பட்டதற்குப் பழி வாங்க பழைய மனைவியின் மகனான இரண்டாம் செலுக்கஸ் உடன் போருக்குப் போய்... சண்டைகளுக்குப் பிறகு சமாதான ஒப்பந்தம் ஏற்படுவதில் இருந்து (தானியேல் 11: 7-9) இரண்டாம், மூன்றாம் செலுக்கஸ் ராஜாக்களிடையே ஏற்படுகிற அதிகார பகிர்வுகளிலிருந்து, மூன்றாவது அந்தியோகஸ் எகிப்துக்கு எதிரான போரில் வெற்றி பெறுவதிலிருந்து (தானியேல் 11: 10) ஆனால் தெற்கு பகுதியின் ராஜாவான நான்காம் டோலமி ராபியாவில் வெற்றிகரமாய் தாக்குவதிலிருந்து (தானியேல் 11: 11-12) பிறகு அந்தியோகஸ் காஜா பகுதியில் எகிப்தியர்களைத் தோற்கடித்து, பாலஸ்தீனத்தை வென்று பனியாஸ்ஐயும் பிடிப்பதிலிருந்து (தானியேல் 11: 13-16), எகிப்தை தன் கைக்குள் வைத்திருக்க தன் மகள் கிளியோபாட்ராவை (சீசர் - ஆண்டனி காலத்திய கிளியோபாட்ரா அல்ல!) ஐந்தாம் டோலமிக்கு திருமணம் செய்து கொடுத்தது, ஆனால் இது வெற்றி பெறாதது (தானியேல் 11: 17), அவன் கிரீஸை மற்றும் தீவுகளைப் பிடிக்க முயற்சிக்கிற பொழுது ரோம தளபதியால் தோற்கடிக்கப்படுவது, பின் திரும்பி வரும்பொழுது, தன் அரண்களை உறுதிப்படுத்த தன் கவனத்தைத் திரும்பும்பொழுது மரித்துப் போவது (தானியேல் 11: 18-19), நான்காம் செலுக்கஸ் தன் தீர்வைகளை சேர்க்க நியமிக்கப்பட்டவனாலேயே கொலை செய்யப்படுவது (தானியேல் 11: 20), அந்த ராஜாவுக்கு பதிலாக எழுந்த அந்தியோகஸ் எபிபேனஸ் சிம்மாசனத்திற்குரிய தன் சகோதரனை வஞ்சகமாய் தள்ளிவிட்டு அரசனாவது (தானியேல் 11: 21), அப்பொழுது பிரதான ஆசாரியனாக இருந்த ஒனியாஸ் (மூன்றாம்) வஞ்சகமாய் கொலை செய்து விடுவது... (தானியேல் 11: 22)...

இப்படி பட்டியலை அதிகமாக்கிக் கொண்டே போகிற அளவுக்கு குறிப்புகள் உள்ளன.

அநேகமாக நடக்கப்போகிற சரித்திரத்தை மறைமுகமான, புதிரான வார்த்தைகளால் தானியேல் தீர்க்கதரிசனம் உரைத்திருப்பது பிரமிக்க வைக்கிறது அல்லவா!

இந்த ராஜாக்களைப் பற்றின தகவல்களை உறுதிப்படுத்துவதைப் போல, பல அகழ்வு ஆராய்ச்சித் தகவல்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. குறிப்பாக டோலமி, செலுக்கஸ் ராஜாக்கள் காலத்தில் அடிக்கப்பட்ட நாணயங்கள். இவைகள் பலவற்றில் ராஜாக்களின் உருவங்களும், எழுத்துக்களும் உள்ளன. எல்லாமே கூறப்பட்ட சரித்திரம் எந்த அளவிற்கு உண்மை என்பதைப் பறைசாற்றுகின்றன.
இந்த டோலமி, செலுக்கஸ் ராஜாக்களின் இறுதி கட்டத்தில், மக்கபேயர்கள் சீகேமைக் கைப்பற்றி தங்கள் நிலையை ஓரளவு சீராக்கிக் கொள்கிறார்கள். கி.மு. 128ல்... பின் கி.மு. 63களில் ரோம சாம்ராஜ்யம் கால் பதிக்க ஆரம்பித்து விட்டது எனலாம்.
"கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாய் இருக்கிறது;..." (சங்கீதம் 19: 7)
-எட்வினா ஜோனஸ் 

கட்டுரைக்கு உதவின நூல்கள்:
1. Insight of the Scriptures - Vol 1 & Vol 2
2. The Bible and Archaeology by J.A.Thompson
3. The Living Word of the Old Testament by B.W.Anderson