Monday, November 21, 2016

சரித்திரம் அவரின் சித்திரம் - 3

நமது வேதாகமத்தில் எஸ்தரின் புத்தகத்தில் முதலாம் வசனம் பெர்சிய பேரரசு பற்றி இப்படிச் சொல்கிறது. 'இந்து தேசம் முதல் எத்தியோப்பியா தேசம் வரைக்குமுள்ள 127 நாடுகளையும் (!) அரசாண்ட அகாஸ்வேரு' என்று... இந்த ராஜா பெர்சியா மகாராஜாக்களில் ஒருவர் எனலாம்.

ஒரு விசேஷமான காரியம் என்னவெனில், முக்கியமான பெர்சிய ராஜாக்களான கோரேஸ், தரியு, அர்தசஷ்டாக்கள், அகாஸ்வேருக்கள் இவர்களுக்கு வேத சரித்திரத்தினூடாக இருக்கிற பங்கு கடந்த முறை பார்த்த அசீரிய ராஜாக்களிலிருந்து இவர்கள் மாறுபட்டவர்கள். ஆண்டவரை ஒரு சமயம் அறிய வேண்டிய பிரகாரமாய் அறியாமலிருந்தாலும், அவரின் மகத்துவமான திட்டத்தின் செயல்பாடுகளுக்கு இவர்கள் பயன்பட்ட விதம் வியக்க வைக்கிறது. எஸ்தர், நெகேமியா, எஸ்றா, ஏசாயா, தானியேல் புத்தகங்களில் இவர்களை சந்திக்க முடியும்.

அர்தசஷ்டாவும், அகாஸ்வேரும் நம்மில் பெரும்பாலானோருக்கு பரிச்சயமென்றாலும், தெரியாத விஷயம் என்னவெனில், இந்த இரு பெயர்களில் ஐந்து ராஜாக்கள் இருக்கிறார்கள் என்பது தான்!!!. வேதாகமத்தில் அவர்களை இப்படி வித்தியாசப்படுத்திக் காட்டவில்லை என்றாலும், சரித்திரப்படி அவர்கள் அப்படித்தான்.

நாம் இந்தப் பகுதியில் முக்கியமாகப் பார்க்கப்போகிற கோரேஸ்க்கு முன்பாக, இதைக் கொஞ்சம் பார்த்து விடலாம்.

எஸ்றா 4ம் அதிகாரத்தில் வருகிற அர்தசஷ்டாவும் (வச.7), எஸ்றா 7ம் அதிகாரத்தில் வருகிற அர்தசஷ்டாவும் (வச.1) வேறு வேறு ராஜாக்கள்.

அர்தசஷ்டா - I אַרְתַּחְשַׁשְׂתָּא (ARTAXERXES - I) எஸ்றா 4ம் அதிகாரத்தில் வருகிறவர். கோரேஸ்க்கு பின்பாக, தரியு ராஜாவுக்கு முன்பாகவும் ஆட்சியிலிருந்தவன். அதாவது கி.மு.465 முதல் 424 வரை, இவர் காலத்தில் சிலரின் பேச்சைக் கேட்டு எருசலேம் ஆலயம் கட்ட தடை விதிக்கப்பட்டதை இவருக்குப் பின் வந்த தரியு ராஜா நீக்குகிறார்.
அர்தசஷ்டா - II (ARTAXERXES - II LONGIMENUS) எஸ்றா 7ம் அதிகாரத்தில் மற்றும் நெகேமியா புத்தகத்திலும் வருகிறவர். (கி.மு.404 - 338) எஸ்றாவுக்கும், நெகேமியாவிற்கும் எருசலேம் போய் திரும்பி வர அனுமதித்த ஒரு நல்ல மகா ராஜா, எஸ்றாவின் எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றினார். (எஸ்றா 7: 6, 12, 23).
'அகாஸ்வேரு' என்ற பெயரில் மூன்று ராஜாக்கள் உண்டு. அகாஸ்வேரு - I தானியேல் 9: 1ல் வருகிறார். மேதியனான இந்த அகாஸ்வேரு, மேதியனான தரியு ராஜாவின் தந்தையாகும். அகாஸ்வேரு - II எஸ்றா 4: 6ல் வருகிற இவர் வேறு. கி.மு.529 முதல் 522 வரை ஆட்சியிலிருந்த இவர் கோரேஸின் மகனாக இருந்திருக்கலாம். அகாஸ்வேரு - III (AHASUERUS) இவர் தான் எஸ்தரில் நாம் பார்க்கிற மகா ராஜாவான அகாஸ்வேரு. தானியேல் 11: 2ல் உள்ள தீர்க்கதரிசனப்படி - அதில் வருகிற 4வது ராஜாவாக இவர் இருக்கக்கூடும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

சரி. எதற்கு இந்த விஷயங்களை நாம் தெரிந்து கொண்டு என்னவாகப் போகிறது என்று பலர் நினைக்கவும் கூடும். இவர்கள் வேறு வேறு காலகட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று புரிந்துகொள்ளும் பொழுது தான், நாம் எஸ்ரா, நெகேமியா, எஸ்தர் புத்தகங்களை சரியானபடி விளங்கிக்கொள்ள இயலும்.
இந்த பெர்சிய ராஜாக்களில் வெகு சுவாரஸ்யமான கதையைக் கொண்டவர் கோரேஸ் மகாராஜா (Cyrus) பாபிலோனிய ராஜாவான நேபுகாத்நேச்சார் மூலமாக, வணங்கா கழுத்துள்ள தம் ஜனங்களுக்கு பாடம் கற்றத் தந்தார் ஆண்டவர். அவன் தேவாலயத்தைக் கொள்ளையிட்டு, தானியேல் முதலான யூத இளைஞர்களை சிறைப்பிடித்து, பாபிலோனுக்கு கொண்டுபோக அனுமதித்த ஆண்டவர், இந்த பெர்சிய ராஜாவான கோரேஸ் காலத்தில் யூத ஜனங்களை மறுபடி எருசலேமிற்கு திரும்பப் பண்ணுவதைப் பார்க்கலாம்.
யூத ஜனங்களுக்கு நிகழ்ந்த இந்த 70 வருஷ நிகழ்வுகளில், இரு வேறு காலகட்டத்தில் வாழ்ந்த இரு வேறு சாம்ராஜ்யத்தின் இரு மகாராஜாக்களை, ஒரு வகையில் சதுரங்கத்தில் காய் நகர்த்துகிறதைப் போல, ஆண்டவர் தம் மகத்தான சித்தத்தின்படி எப்படி பயன்படுத்துகிறார் பாருங்கள்.

நல்லது, யார் இந்த கோரேஸ் ராஜா?
பெர்சியப் பேரரசின் முதல் முக்கியமான முதல் ராஜாவான இவர் கி.மு.539ல் தான் உலக சரித்திரத்தில் தன் முத்திரையைப் பதித்தான் என்று சொல்லலாம். ஏனெனில் இந்த கி.மு.539 தான் மகா பாபிலோனிய அரசை ஒரே நாளில் கோரேஸ் வீழ்த்தின வருடம். ஆனால் இப்படி ஒரு ராஜா வரப் போகிறான் என்று, 'ஆண்டவரைப் பற்றி ஏதும்' அறிந்திராத இந்த ராஜாவை முன்னறிவித்தது யார் தெரியுமா? கொஞ்சம் குறைய கோரேஸ்க்கு 150 வருஷங்களுக்கு முன்பிருந்த ஏசாயா தீர்க்கதரிசி தான்.

"...நான் உன்னைப் பெயர்சொல்லி அழைத்து, நீ என்னை அறியாதிருந்தும், உனக்கு நாமம் தரித்தேன்." (ஏசாயா 45: 4)

"கோரேசைக் குறித்து: அவன் என் மேய்ப்பன்; அவன் எருசலேமை நோக்கி: நீ கட்டப்படு என்றும்; தேவாலயத்தை நோக்கி: நீ அஸ்திபாரப்படு என்றும் சொல்லி, எனக்குப் பிரியமானதையெல்லாம் நிறைவேற்றுவான் என்று சொல்லுகிறவர் நான்." (ஏசாயா 44: 28)

இப்படி இந்த ராஜாவினுடைய பெயரை அத்தனை வருஷங்களுக்கு முன்பாக குறிப்பிட்டது மட்டுமல்ல, அவன் செய்யப் போகிற காரியங்களைப் பற்றியும் முன்னறிவிக்கிறார் ஏசாயா.

ஏசாயா தீர்க்கனின் காலம் கி.மு.740 முதல் 680 வரை எனப்படுகிறது. இந்த நாட்களில் பாபிலோனிய பேரரசு கூட உருவாகவில்லை. ஏசாயாவிற்கு பின்பே அது ஆரம்பிக்கிறது (கி.மு.645 முதல் 539). ஆனால் அதற்கு முன்பாகவே அந்த பாபிலோனிய பேரரசை வீழ்த்துகிற கோரேஸ் பற்றின குறிப்புகள் எத்தனை ஆச்சர்யம்!

நேபுகாத்நேச்சாரின் காலத்தை பாபிலோனிய பேரரசின் உன்னதமான காலங்கள் ஆரம்பிக்கிற வருஷங்களாக எடுத்துக் கொண்டால் கி.மு.624லிருந்து அதன் வல்லமை, பராக்கிரமம் அதிகரித்துக் கொண்டே போனது. பல வகைகளிலும் புகழ் பெற்றது. குறிப்பாக ராணுவ பலம். தலைநகரமான பாபிலோன், முக்கிய நதியான யூப்பிரட்டீஸின் நதியோரம் அமைந்ததொன்றாகும்.
பாபிலோனிய ராணுவ பிரதானிகள் இந்த நகரத்தின் கோட்டை அரண்களை எவ்விதமாக வடிவமைத்திருந்தார்கள் எனில், ஓடிக் கொண்டிருக்கும் நதியையே கோட்டையைச் சுற்றி இருக்கிற அகழியைப் போல அமையச் செய்திருந்தார்கள்.
மட்டுமல்ல, நதியின் ஒரு கால்வாய் நகருக்குள்ளும் சென்றது. இன்னும் பெரிய வலுவான வெண்கலக் கதவுகளும் அரண்களில் இருந்தன. இந்த நதி 'அகழி' அமைப்பே எவரும் பாபிலோனைத் தாக்க நினைத்துக் கூட பார்த்துவிட முடியாதபடி மாபெரும் பாதுகாப்பு அரணாக இருந்தது. நதியை ஒட்டின கோட்டைச் சுவரின் அகலம் 21 அடிகளுக்கும் அதிகமாகும். இதைத் தாண்டி, இன்னொரு சுற்று மதில் சுவரும் இருந்தது.
எவரும் நெருங்க யோசிக்கக்கூடத் தயங்குகிற இந்த மகா பிரமாண்டத்தினால் தான் நேபுகாத்நேச்சார் தானியேல் 4: 30ல் 'இது என் வல்லமையின் பராக்கிரமத்தினாலும், என் மகிமைப் பிரதாபத்துக்கென்று, ராஜ்யத்துக்கு அரமனையாக நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா?' என்கிறான்.

எனினும், கோரேஸ் ராஜா, லிடியா, சர்தை போன்ற ராஜ்யங்களை ஜெயித்த பிறகு, இந்த மாபெரும் பாபிலோனுக்கு குறி வைக்கிறான். அந்நேரம் பாபிலோனின் மகா ராஜாவாக இருந்தவன் நேபோனிடஸ். (இவனுடைய மகனான பெல்ஷாத்சார், உடன் ஆளுநனைப் போல, அரண்மனையில் இருந்தான். தானியேல் 5: 1) இந்த பாபிலோனை வெல்ல கோரேஸ் மேற்கொண்ட உத்தி மிகப் பிரசித்தமானது.

பாபிலோனுக்கு வெளிப்புறத்தில், அதற்கு எதிரே ஆனால் சற்றுக் கீழாக இருந்த செயற்கையான ஏரி ராணி நிட்டோகிரிஸ் (Nitocris) ஏரியில், போகும்படியாக, கோட்டையைச் சுற்றி இந்த நதி அகழியில், ஒரே நேரத்தில் ஏராளமான கால்வாய்களை வெட்டி, நதியோட்டத்தை திருப்பிவிட, மிகக் குறைந்து போன ஆழத்தில், கோரேஸின் படைகள் எளிதாகக் கடந்தன. இதில் சுவாரஸ்யம் என்னவெனில், தங்களின் பாதுகாப்பு அரணைப் பற்றின மிதமிஞ்சிய நம்பிக்கையில் அரண்களிலிருந்த மாபெரும் கதவுகளைக் கூட சரியாக அடைக்காதிருந்தார்களாம் பாபிலோனியப் படையினர். நிலைமைகள் கட்டுக்கு மீற முக்கியமான ஒரு பாபிலோனிய தளபதி கட்சி மாற, வெகு சுலபமாக ஒரே நாளில் பாபிலோனிய அரசு வீழ்ந்தது. கோரேஸின் ஆளான மேதியனான தரியு, பெல்ஷாத்சார் கொலை செய்யப்பட்டு விட ராஜாவானான்.

பின்பு இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை பல சரித்திர ஆசிரியர்களும் பதிவு செய்துள்ளனர். என்றாலும், இதில் குறிப்பிடத்தக்க காரியம் என்னவெனில், இப்படி நடக்கப் போவது பற்றின குறிப்புகள் ஏசாயாவிலும் (46: 10, 11), எரேமியாவிலும் (50: 38 / 51: 30 - 32) முன்பாகவே எழுதி வைக்கப் பட்டிருந்ததுதான். 'மர்டக்' என்ற பாபிலோனிய தெய்வமொன்றை வணங்கி வந்த கோரேஸ்க்கு, பாபிலோன் வீழ்ந்த பிறகும், புதிய அரசில் மிக முக்கிய பொறுப்பில் இருந்த தானியேல் தீர்க்கதரிசி, கோரேஸிடமும் மிகுந்த செல்வாக்கு உடையவராய் இருந்தார் (தானியேல் 6: 28).
ஒரு வேளை , கோரேஸிடம், தானியேல் எப்படி கோரேஸ் பிறப்பதற்கு வெகு வருஷங்களுக்கு முன்பாகவே, அது பற்றி ஏசாயா முன்னறிவித்தார் என்றும், அவர் ஜெயிக்கப் போவது பற்றின ஏசாயா மற்றும் எரேமியாவின் குறிப்புகளையும்கூட சொல்லி இருந்திருக்கக் கூடும். விளைவு...

கோரேஸின் இந்த ஆச்சர்யமான அறிக்கை, அதுவும் அவனுடைய முதலாம் வருஷத்திலேயே!
"பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் பூமியின் ராஜ்யங்களையெல்லாம் எனக்குத் தந்தருளி, யூதாவிலுள்ள எருசலேமிலே தமக்கு ஆலயத்தைக் கட்டும்படி எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்." 
(2நாளாகமம் 36: 22 & எஸ்றா 1:2) என்கிறான்.

(இந்த இடத்தில் ஏசாயா 44: 28ஐ நினைவுகூர்வது நல்லது).

கோரேஸு டைய இந்த அற்புதமான அறிக்கை எஸ்றா 1: 2-4ல் உண்டு. மட்டுமல்ல, பாபிலோன் ராஜா எடுத்துக் கொண்டு போன தேவாலயத்து பாத்திரங்களை எல்லாம் திரும்பக் கொடுக்கிறான். ஒப்படைத்தது யாரிடம் தெரியுமா?

பாபிலோனுக்கு சிறைப்பிடித்துக் கொண்டு போகப்பட்ட யூதாவின் ராஜாவான யோயாக்கீனுடைய மகனாகிய சேஸ்பாரிடத்தில் (SHESHBAZZAR שֵׁשְׁבַּצַּ֔ר ) தான். இதன் விசேஷம் என்னவெனில் தலைமைப் பொறுப்பு மீண்டுமாக தாவீதின் வம்சாவளியினரான ஒருவரிடமே சேர்வது தான். இவரைத் தொடர்கிற செருபாபேலுமே (Zerubbabel זְרֻבָּבֶל ) இந்த தாவீதின் வழியினனாக இருப்பதைக் கவனிக்கலாம்.
இந்த நேரத்தில் சிலருக்கு இன்னொரு சந்தேகம் எழ வாய்ப்புண்டு. கண்டெடுக்கப்பட்ட கோரேஸின் உருளையில் (Cyrus Cylinder) உள்ள விவரங்கள் எதிர்மாறாக இருக்கிறதே, பெற்ற எல்லா வெற்றிகளுக்கும் மர்டுக் தேவனை சிலாகித்து இருப்பதாக அல்லவா சொல்கிறார்கள் என்று கேட்கவும்கூடும்.

சத்திய வேதத்தில், கோரேஸின் வார்த்தைகள் பற்றி இத்தனை தீர்க்கமாய், தெளிவாய் இருந்தும், கோரேஸின் உருளையில் அப்படி இருக்கக் காரணம், அதை உருவாக்கின பாபிலோனிய பூசாரிகளின் பிரச்சாரம் என்கிறார் எமில். ஜி. கிரிச் (Emil G. Hirsch) என்கிற ஆராய்ச்சியாளர்.
ஏனெனில் கோரேஸுடனான போரில் ஜெயிப்பதற்காக நெபோனிடிஸ், பாபிலோனின் எல்லா தெய்வங்களையும் சேர்ந்து தன்னிடம் வைத்துக் கொண்டிருந்தும், தோற்றுப்போய் விட, இதை ஈடுகட்ட கோரேஸின் வெற்றிக்கு 'மர்டுக்' தேவனை பிரதானப்படுத்துகிற முயற்சி தான் இது என்கிறார் இவர். யூத ஜனங்களைத் திரும்ப அனுப்ப கோரேஸ் பிறப்பித்த அரசாணை கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. அதன் விவரங்கள் உண்மையைக் கோடிட்டுக்காட்டக் கூடும் (எஸ்றா 6: 3 - 5). இந்த கோரேஸ் ராஜாவின் கல்லறை இன்றைக்கும் பாசர்கடேயில் உண்டு. அவனைப் பற்றின விசேஷமான வாசகங்களோடு!
"உமது நாமத்தை எல்லாத் தலைமுறைகளிலும் பிரஸ்தாபப்படுத்துவேன்..." (சங்கீதம் 45: 17)

-எட்வினா ஜோனஸ் 
கட்டுரைக்கு உதவின நூல்கள்:
1. Insight of the Scriptures - Vol 1 & Vol 2
2. The Bible and Archaeology by J.A.Thompson
3. The Living Word of the Old Testament by B.W.Anderson

Friday, November 18, 2016

சரித்திரம் அவரின் சித்திரம் - 2


வேதாகமத்தில் வருகிற சரித்திரத் தகவல்களை அணுகி, ஆராய்ந்து என்ன ஆகப் போகிறது? தெரிந்து என்ன பயன்? முடிந்தவைகள், ஒளிந்து கொண்டிருப்பவைகள் பற்றின அலசல் எதற்காக? என்றெல்லாம் கேள்விகள் நம்மில் பலரின் மனதிலும் எழுவது இயல்பானதுதான். சென்ற வலைப்பதிவில் தானியேலையும், பாபிலோனிய ராஜாக்கள் பற்றியும் படித்துவிட்டு பலர் இப்படியாகக் கேட்கவும் செய்தனர்.

ஆனால் ஒரு மலை முகப்பின் உச்சியில் நின்று பார்க்கும்பொழுது விரியும், பரந்திருக்கும் காட்சிகளில் பரவசமாகிற பொழுதோ, கண்கள் திகட்ட பசுமையாய் அடர்ந்திருக்கிற கானகக் காட்சிகளில் லயிக்கிற பொழுதோ, கடலினுள் வாழும் விசித்திர நீர் ஜந்துக்களை வினோத மீன் வகையறாக்களை சிலாகிக்கும் பொழுதோ இவைகளைப் படைத்த ஆண்டவரைப் பற்றின சிலிர்ப்பு நமக்குள் துளிர்த்து அவரைத் துதிக்க வைப்பதைப் போல, இந்த உலக சரித்திரத்தினூடாக நாம் கண்டறிய முடிகிற அளவில் கரம், சித்தம், செயல்பாடுகள், ஊன்றிக் கவனிக்கையில் சிலிர்க்க வைக்கின்றன. அவர் சித்தம் செயல்பட புறஜாதி ராஜாக்களின் சில சரித்திர நிகழ்வுகள் பயன்படுவது, நம் விசுவாச வேர்கள் புத்துயிர் பெற ஏதுவாக இருக்குமென்று நாம் நம்பலாம்.


வேதாகமத்தில் வருகிற இன்னொரு முக்கியமான பேரரசு அசீரியர்களுடையது. அநேக வருஷங்களுக்கு முன்பாக, நம் பழைய ஏற்பாட்டு புத்தகங்களில் வருகிற இந்த அசீரிய ராஜாக்கள் பலரையும், உலக சரித்திரப் படி அடையாளப்படுத்த முடியாதென்றும், புராண பாத்திரங்கள் போலதான் என்றும் பல அறிஞர்கள் கூறி வந்தனர். உதாரணத்திற்கு ஏசாயா 20: 1ல் மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கிற 'சர்கோன்' ராஜா, அசீரிய சரித்திரத்திலேயே இல்லை என்றார்கள்.
ஆனால் நடைபெற்றுக் கொண்டிருக்கிற அகழ்வு ஆராய்ச்சிகளும், தொல்பொருள் ஆய்வுகளும் வேதாகமத் தகவல்களின் துல்லியதையும், மெய்மையையும் நிரூபித்துக் கொண்டு வருகின்றன.

அசீரியா. இந்த பெயர் நோவாவின் மகனான சேமின் மகனான அசூரின் வழித்தோன்றல்கள் மூலம் ஏற்பட்டிருக்கக்கூடிய நாடாக இருக்கலாமென்று குறிப்புகள் உண்டு.

இன்றைய ஈராக்கின் வடக்குப் பகுதியில் தான் அந்நாளில் அமைந்திருந்தது அசீரிய பேரரசு. இதன் பல நிகழ்வுகளை நம் வேதாகம சம்பவங்களோடு அழகாகப் பொருத்திப் பார்க்க முடியும். குறிப்பாக கி.மு.900 முதல் கி.மு. 600 வரை அமைந்திருந்த புதிய அசீரிய ராஜாக்களின் காரியங்களை நம் வேதத்தில் வருகிற பல நிகழ்வுகளில் பொருத்திப் பார்க்க வாய்ப்புண்டு. இந்த காலகட்டத்தில் தான் அவர்களின் அரசு விரிவடைந்து மத்திய தரைக்கடல் பகுதியைக் கடந்து, பாலஸ்தீனம் வரை நீண்டு, எகிப்தையுமே தொட்டது. இவர்கள் தாம் இஸ்ரேல் தேச வடக்கு பகுதியை ஒழித்து சமாரியாவைப் பிடித்து, அங்கு தம் மக்களைக் குடியேற்றினார்கள். பிறகு அவர்கள் யூதாவின் மேல் கவனத்தைத் திருப்பின பொழுது பாபிலோனிய ராஜாக்களின் கை ஓங்கி கி.மு.612ல் அவர்களிடம் தோற்றுப்போனார்கள்.
சமீப வருஷங்களில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த அசீரிய ராஜாக்களின் பதிவுகளான அந்தந்த ராஜாக்களின் குறிப்புகளும், அரசின் பொதுவான நிகழ்வுக் குறிப்புகளும் வேதாகம குறிப்புகளோடு அதிசயிக்கத்தக்க வகையில் ஒத்துப் போனது ஆராய்ச்சியாளர்களை பிரமிக்க வைத்தது. ராஜாக்களின் பெயர்களைக் குறிப்பிடுவதில்கூட வித்தியாசம் இல்லை. நாம், (கிறிஸ்தவர்கள்) பல தடவைகளிலும் வேதாகம சரித்திர காரியங்களை மிகவும் இயல்பானதாக எடுத்துக்கொண்டாலும், வேதத்தை அறிந்திராத / நம்பாத பல ஆராய்ச்சியாளர்கள் அந்த நாட்களின் சரித்திரங்கள் பற்றின வேதாகமக் குறிப்புகள் மிகவும் ஆச்சரியகரமான வகையில் உண்மையாக இருப்பதை சிலாகிக்கிறார்கள்.

வேதாகமத்தில் காணப்படுகிற அசீரிய ராஜாக்கள்:
  1. (மூன்றாம்) திகிலாத் பிலேசர் - கி.மு.745 - 725 (2இராஜாக்கள் 15: 19, 29, 16: 7, 10, 1நாளாகமம் 5: 6, 26, 2நாளாகமம் 28: 20)     
  2. (ஐந்தாம்) சல்மனாசார் (שַׁלְמַנְאֶסֶר) - கி.மு.726 - 722 (2இராஜாக்கள் 17: 3, 18: 9
  3. (இரண்டாம்) சர்கோன் - கி.மு.721 - 705 (ஏசாயா 20: 1)
  4. சனகெரிப் (סַנְחֵרִיב) - கி.மு.704 - 681 (2இராஜாக்கள் 18: 13, 19: 16, 20, 36, ஏசாயா 36: 1, 37: 17, 21, 37, 2நாளாகமம் 32: 1, 2, 9, 10, 22)  
  5. எசரத்தோன்( אֵסַר חַדֹּן) - கி.மு. 680 - 669 (2இராஜாக்கள் 19: 37, ஏசாயா 37: 38, எஸ்றா 4: 2
இவர்களைத் தவிரவும் சில அசீரிய ராஜாக்களின் பங்கு மறைமுகமாய் உண்டு. முதலாம் திகிலாத் பிலேசரில் அசீரிய அரசு ஆரம்பிக்கிறது எனலாம். இந்த காலகட்டம் கி.மு.1100 முதல் 900 வரை தொடர்கிறது. இதில் அசீரியா அரசு மிகவும் அடங்கின நிலையில் இருந்ததாம். இந்த காலகட்டங்கள் தாம் தாவீது ராஜாவும், சாலொமோன் ராஜாவும் முழுவீச்சில் இருந்த நாட்களாகும். அதே போல யோனா போய் அசீரியாவின் தலைநகரான 'நினிவே'யில் பிரசங்கித்து பெரும் மனமாற்றம் வந்ததை வேதாகமத்தில் படிக்கிறோம்.அந்தச் சம்பவம் நிகழ்ந்திருக்கக்கூடிய கி.மு.9ம் நூற்றாண்டில் (கி.மு.848ல்) ஆட்சியில் இருந்தவன் அநேகமாக மூன்றாம் அடாட் நிராரி என்கிறார்கள்.
இதை உறுதிப்படுத்த ஆதாரங்கள் குறைவு என்றாலும், ஒரு சுவாரஸ்ய குறிப்பு இதை உறுதிப்படுத்துவதைப் போல உள்ளது. போரிடுவதை ஒரு மதத்தைப் போல, தொழிலைப் போல கையாளுகிற அசீரிய ராஜாக்களின் வரிசையில் இந்தக் காலகட்டம் மட்டுமே மிகமிகக் குறைந்த அளவாக அந்த உக்கிரம் இருந்ததாம்.

மூன்றாம் திகிலாத் பிலேசர் - பிற்கால அசீரிய பேரரசை நிறுவியவர் என்று இவனைச் சொல்லலாம். வெற்றிபெற்ற பகுதிகளைத் தக்க வைத்துக்கொள்ள அநேகம் நடவடிக்கைகளை மேற்கொண்டான் இவன். அதில் முக்கியமானதொன்று, ஒரு பட்டணத்தைப் பிடித்தபிறகு, அதில் உள்ளவர்களைத் துரத்திவிட்டு, தன் மக்களைக் குடியேற்றுவது. இவனுக்குப் பின் வந்த ராஜாக்களும் இந்த யுக்தியையே பின்பற்றினார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. வேதாகமத்தில் உள்ள குறிப்புகளை உறுதி செய்வதைப் போல, இவனுடைய ஆண்டுக் குறிப்புகள் உள்ளன.

மூன்றாம் திகிலாத் பிலேசரின் ஆண்டுக் குறிப்பு:
இஸ்ரேலையும், அங்குள்ள அனைவரையும் அவர்களின் பொருட்களோடு அசீரியாவுக்கு கொண்டு போனேன். அவர்கள் தங்கள் ராஜாவாகிய பெக்காவை தூக்கி எறிந்தார்கள். அவனுடைய ஸ்தானத்தில் நான் ஒலிசியாவை அவர்களுக்கு ராஜாவாக்கினேன். 1000 தாலந்து வெள்ளியை கப்பமாகக் கொடுத்தார்கள். ANET 28.
வேதாகமப்பகுதி: 2 இராஜாக்கள் 15
இஸ்ரவேலின் ராஜாவாகிய பெக்காவின் நாட்களில், அசீரியாவின் ராஜாவாகிய திகிலாத்பிலேசர் வந்து, ஈயோனையும், பெத்மாக்கா என்னும் ஆபேலையும், யானோவாகையும், கேதேசையும், ஆத்சோரையும், கீலேயாத்தையும், கலிலேயாவாகிய நப்தலி தேசமனைத்தையும் பிடித்து, குடிகளைச் சிறையாக அசீரியாவுக்குக் கொண்டுபோனான். ஏலாவின் குமாரனாகிய ஒசெயா ரெமலியாவின் குமாரனாகிய பெக்காவுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, அவனை உசியாவின் குமாரனாகிய யோதாமின் இருபதாம் வருஷத்தில் வெட்டிக்கொன்றுபோட்டு, அவன் ஸ்தானத்தில் ராஜாவானான். (2இராஜாக்கள் 15: 29, 30)

ஐந்தாம் சல்மனாசார் - அரசாண்ட நாட்களில், சில புதிரான காரணங்களினால், ஓசெயா, அசீரியா ராஜாவுக்கு விரோதமாக எழும்பின பொழுது, சல்மனாசார், அவனைத் தோற்கடித்து சிறைபிடித்து, சமாரியவை முற்றுகையிட்டான். சிறைபிடித்துக் கொண்டு போன இஸ்ரவேல் ஜனங்களை கோசான் நதியோரமான ஆலாகிலும், ஆபேரிலும் மேதியரின் பட்டணங்களிலும் குடியேற்றினான். 2இராஜாக்கள் 18: 9-11ல் உள்ள இந்தக் காரியங்கள் பாபிலோனிய நிகழ்வுக் குறிப்புகளிலும் காணப்படுகிறது.

(இரண்டாம்) சர்கோன் - என்பவனைப் பற்றின குறிப்பு வேதாகமத்தைத் தவிர (ஏசாயா 20: 1) மற்ற சரித்திர பதிவுகளில் இல்லாமலிருந்ததால் இப்படி ஒரு ராஜாவே இல்லை என்று சொல்லி வந்தார்கள். ஆனால் ஈராக்கில் நடைபெற்ற ஒரு புதைபொருள் ஆராய்ச்சியில் இந்த சர்கோன் கட்டிய மிகப் பிரமாண்டமான அரண்மனையைக் கண்டுபிடித்தார்கள்.

சர்கோனைப் பற்றின கல்வெட்டுக் குறிப்பு:
திடீரென்று வந்த கோபத்தில், நான் வேகமாகக் கடந்துபோய், என்னுடைய ரதம் தவிர, என்னுடைய சொந்தப் படையுடன் ஆஸ்தோத்திற்கு விரோதமாய் போய் அஸ்தோத், காத், அஸ்டுடிம்மு பட்டணங்களைக் கைப்பற்றினேன்.  ANET P 286.
வேதாகமப் பகுதி: ஏசாயா 20: 1
தர்த்தான், அசீரியா ராஜாவாகிய சர்கோனாலே அனுப்பப்பட்டு, அஸ்தோத்துக்கு வந்து, அஸ்தோத்தின் மேல் யுத்தம்பண்ணி, அதைப் பிடித்த வருஷத்திலே... (ஏசாயா 20: 1).

சனகெரிப் ராஜா - அசீரிய ராஜாக்களின் வரிசையில் பலரும் அதிகமாய் தெரிந்து வைத்திருப்பதற்கு காரணம் எசேக்கியா ராஜாவுக்கு அவன் விட்ட சவால் ஆகும். கி.மு.704 முதல் 681 வரை அரசாண்ட இவன், அசீரிய சாம்ராஜ்யத்தை மிகவும் விரிவாக்கினவன். இவன் கி.மு.701ல் யூதா மீது படையெடுத்து வந்த சம்பவங்களைத்தாம் நாம் ஏசாயா 36, 37 அதிகாரங்களில், 2நாளாகமம் 32ல், 2இராஜாக்கள் 18, 19ல் மிகவும் விரிவாகப் பார்க்கலாம். முன்பாக எசேக்கியா கொடுத்த வெகுமானங்களையும் பொருட்படுத்தாதபடிக்கு தேவனாகிய கர்த்தரை நிந்தித்ததாக வேதாகமக் குறிப்பு உள்ளது. விளைவு? தேவதூதன் அடிக்க, 1,85,000 அசீரியப் படையினர் சங்கரிக்கப்பட்டனர்.

மிகப் பயங்கரமான இந்த 'சம்பவம்' நடந்ததொன்று தானா? நடந்தது பற்றி வேறு எங்காகிலும் குறிப்புகள் உண்டா? என்று கேட்பதுண்டு.

சனகெரிப்பின் ஆண்டுக் குறிப்புகளில் எசேக்கியா தந்த வெகுமானம் பற்றின குறிப்புகள், கொடுக்கப்பட்ட சந்தர்ப்பம் தவிர, மற்ற பல விஷயங்களோடு, வேதாகமத்தில் கூறப்பட்டவைகளோடு ஒத்துப்போனாலும், நடந்த 'மாபெரும்' சங்காரம் பற்றி ஏதும் தகவல்கள் இல்லை. மாறாக சனகெரிப்பின் வெற்றி (?) மிகவும் மிகைப்படுத்தப்பட்டிருக்கிறது. இதில் விசேஷம் என்னவென்றால் இந்த வெற்றி (?)க்கு பிறகு அவன் 'யூதா' பக்கம் திரும்பவில்லை என்பதுதான். இதற்கும், அதற்குப் பிறகு 20 வருஷங்கள் அரசாண்ட பிறகும்.

'இந்த தேவதூதன் சங்காரம்' பற்றி யூத சரித்திர ஆசிரியர் ஜோஸிபஸ் குறித்திருக்கிறார்.

சனகெரிப் ராஜாவின் தளபதி ரப்சாகே தலைமையில் முற்றுகையிட்டபொழுது ஒரு பெரிய வாதை அசீரியப் படையைத் தாக்கி 1,85,000 பேர் மரித்தார்கள் என்று சிலர் ஷீராடோட்டஸின் ஒரு விசித்திர சரித்திரக் குறிப்பை காட்டுகிறார்கள். ஒருநாள் இரவில் மிக ஏராளமாய், எக்கச்சக்கமாய் வயல் எலிகள் புகுந்து முழு அசீரிய படைகளையும் முடக்கிப்போட்டது... இது பற்றியதாக இருக்கலாமென்கிறார்கள்.

அசீரிய ராஜா எசரத்தோன் (Esarhaddon אֵסַר חַדֹּן) பதவிக்கு வந்ததை, வந்த சூழ்நிலையை வேதாகமத்தில் குறிப்பிடுவதைப் போலத்தான் அசீரியர்களின் நிகழ்வுத் தொகுப்பும் சொல்கின்றன. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
தேவனை அறிந்திராத இந்த மகா ராஜாக்களையும் தம் சித்தத்தை நிறைவேற்ற எப்படிப் பயன்படுத்தினார் என்பது ஆழ்ந்து கவனிக்கையில் சிலிர்ப்பூட்டாமல் இருக்க இயலாது. மட்டுமல்ல, வேத வசனங்களின் துல்லியம் நினைக்க... நினைக்க... பிரமிப்புக் குன்றாத ஒரு அற்புதம்!
இப்போதும் ராஜாக்களே, உணர்வடையுங்கள், பூமியின் நியாயாதிபதிகளே, எச்சரிக்கையாயிருங்கள்.- சங்கீதம் 2: 10
-எட்வினா ஜோனஸ் 
கட்டுரைக்கு உதவின நூல்கள்:
1. Archaeology and Biblical Research - Vol: 4, No: 2
2. Insight of the Scriptures - Vol I & II

Wednesday, July 20, 2016

சரித்திரம் அவரின் சித்திரம் - 1


ரவி ஜக்கரியாஸ் (Ravi Zacharias) என்கிற புகழ்பெற்ற பிரசங்கியார் தான் புத்தகமொன்றில் தேவனுடைய செயல்பாடுகளைப் பற்றி விவரிக்கும்பொழுது "History is His Story" என்கிறார். அழகாக இதை தமிழில் சொல்ல வேண்டுமானால் 'சரித்திரம் அவர் எழுதும் சித்திரம்' எனலாம். உலக சரித்திரத்தில் தேவனுடைய கரம் மிகத் தெளிவாய் இருப்பதை பல அகழ்வு ஆராய்ச்சிகள் உணர்த்திக் கொண்டே வருகின்றன. எல்லாக் காலங்களிலும் அனைத்து சூழ்நிலைகளும் அவரின் ஆளுமைக்குட்பட்டே இருந்திருக்கின்றன என்பதற்கான நிரூபணங்கள் ஏராளம். வேதாகமத்தின் தானியேலை 'சரித்திர மனிதன்' என்று ஒப்புக்கொள்கிற சில பண்டிதர்கள், தானியேலின் நண்பர்களைப் பற்றின காரியங்களை வெறும் புராணங்கள் என்றும் தானியேல் புத்தகத்தை எழுதினது தானியேலே அல்ல என்றும் வாதிட்டு வந்தார்கள்.

மட்டுமல்ல, பதிப்பிக்கப்பட்ட பல வேதாகமங்களிலும் கூட தானியேலைப் புத்தகத்தைப் பற்றின அறிமுகங்களில்கூட அப்படித்தான் சொல்லப்படுகிறது. உதாரணத்திற்கு 'New Jerusalem Bible'ல் தானியேல் எழுதப்பட்ட காலம் கி.மு.167 முதல் கி.மு.164 என்றும், மக்கபேயர்களின் புரட்சிக்கு முன்பாக எழுதப்பட்டிருக்கலாம் என்றிருக்கிறது. தானியேலின் சரித்திரப் பின்னணி நாம் அறிந்திருக்கிற (உலக) சரித்திர தகவல்களுக்கு பொருந்தி வராதிருப்பதாகவும், அவைகள் அந்தக் காலத்தில் நடந்தவைகள் தானா என்று உறுதியாக சொல்ல இயலாது என்கிற தொனியில் அந்த குறிப்பு தொடர்கிறது. தானியேல் புத்தகத்தின் நோக்கம், ஒடுக்கப்படுகிற காலத்தில் இருந்த யூதர்கள் தங்கள் விசுவாசத்தையும், நம்பிக்கையையும் காத்துக் கொள்ளவும், தானியேலைக் காத்தவிதமாக தேவன் நம்மையும் காப்பார் என்று உணர்த்துவதற்காக தான் என்றும் இருக்கிறது.

Readers Digest Bibleல் உள்ள தகவலின்படி தானியேல் புத்தகம் எழுதப்பட்ட காலம் கி.மு.168 முதல் கி.மு.165. 'சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ' வருகிற கதையானது அநேகமாக கி.மு.2ம் நூற்றாண்டில் அந்தியோகஸ்ஸின் ஆட்சியில் அவதிப்பட்ட யூதர்களுக்கு ஆறுதல் அளிக்க, உற்சாகப்படுத்த எழுதப்பட்ட கதை என்றிருக்கிறது. 

கத்தோலிக்க வேதாகமத்தில் தானியேல் புத்தகம் எழுதப்பட்ட காலம் செலுக்கஸ், டோலமிஸ் ஆட்சிக் காலமாக இருக்கலாம் என்றும், அநேகமாக கி.மு.180லிருந்து கி.மு.100க்குள் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்றிருக்கிறது. தானியேல் புத்தகத்தை எபிரேய வேதாகமத்தில் 'தீர்க்கதரிசிகளின்' புத்தகங்களின் தொகுப்பில் சேர்க்காமல், 'பரிசுத்த நூல்கள்' தொகுப்பில்தான் வைத்துள்ளார்கள் என்றும், மூன்று மொழிகளில் எழுதப்பட்ட (உள்ள) ஒரே புத்தகம் என்றும் சுவாரசியமான குறிப்பு உண்டு.

இவ்வாறு சொல்லப்படுவதற்கான மூன்று முக்கிய காரணங்களையும், அதற்கான பதில்களையும் பார்க்கலாம். The Open Bibleல் உள்ள தகவல்களின் உதவியோடு.

1. தீர்க்கதரிசனங்கள் குறித்ததான வாதம்:
தானியேலில் வருகிற தீர்க்கதரிசனங்கள் மிகவும் துல்லியமாக இருப்பதால் அதற்கு சாத்தியமில்லை என்ற வாதம் இது. குறிப்பாக தானியேல் 11ல் வருகிற நூற்றுக்கும் மேற்பட்ட தீர்க்கத்தரிசனங்கள் ஏதும் பிசகாமல் அப்படியே நிறைவேறினதை வைத்து, இது நிச்சயமாக, அவைகள் நிறைவேறின பின்பே எழுதப்பட்டிருக்க வேண்டும். அதாவது கி.மு.2ம் நூற்றாண்டில்தான் என்கிறது இவ்வாதம். ஆனால் தீர்க்கதரிசனங்கள் நிறைவேறி விட்டதை வைத்து, தீர்க்கதரிசனங்களுக்கு இந்த அளவிற்கு சாத்தியமில்லை என்பது இறையியல் ரீதியாக கொண்டிருக்கிற தவறான கணிப்பாகும்.

(இதை இடத்தில் ஆண்டவராகிய இயேசுதாமே, மத்தேயு 24: 15ல் 'பாழாக்குகிற அருவருப்பைக் குறித்துத் தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே' என்று சொல்லுவதை நினைவுகூர்வது நல்லது. இயேசு தாமே அவரை இப்படியாகக் கூறி இருப்பது எத்தனை ஆச்சரியமல்லவா?

2. மொழியியல் ரீதியான வாதம்:
தானியேல் 2 முதல் 7 அதிகாரங்களில் கையாளப் பட்டிருக்கிற அராமிய மொழியின் பல வார்த்தைகள், பிற்கால பெர்சிய, கிரேக்க காலத்திற்கானது என்பதால், தானியேல் புத்தகம் வெகு பிந்தி எழுதப்பட்டிருக்க வேண்டும். அநேகமாக கி.மு.2ம் நூற்றாண்டில் என்று வாதிட்டார்கள்.
ஆனால் சமீபத்திய கண்டுபிடிப்புகள் ஒரு உண்மையை வெளிப்படுத்தின. தானியேல் பயன்படுத்தின அராமிய மொழி அந்த நாட்களிலேயே சில உயர்குலத்தவரால் பயன்படுத்தப்பட்டு வந்ததாகும். மட்டுமல்ல, தானியேலின் காலத்திலேயே 'கோரேஸின்' ஆட்சியும் ஆரம்பித்திருந்ததால் தானியேலின் மொழியில் அந்த மொழி வழக்கின் பாதிப்பு இருப்பது இயற்கை அல்லவா. கிரேக்க மொழியில் அமைத்திருப்பது குறிப்பாக இசைக்கருவிகள் பற்றிய பெயர்களாகும். ஆனால் கிரேக்கர்கள் பலரும் பாபிலோனிய ராணுவத்தில் பணிபுரிந்தது பற்றி ஆதாரங்கள் இருக்க, அந்த இசைக்கருவிகளின் பெயர்கள் இருப்பது இயல்பானதொன்று தான். கி.மு.2வது நூற்றாண்டில் தான் எழுதப்பட்டது எனில் இன்னுமே நிறைய கிரேக்க மொழிச் சொற்கள் இருந்திருக்க வேண்டுமே. ஆனால் அவ்விதமாக இல்லையே. 
3. சரித்திரத் தகவல்கள் பற்றின வாதம்:
தானியேலில் உள்ள பல சரித்திரக் குறிப்புகள் பற்றின தவறுகள், இது 2ம் நூற்றாண்டில் எழுதப்பட்டதன் விளைவு எனப்பட்டது. ஆனால் இதுவும் தவறு என்பதற்கான நிரூபணங்கள் வந்து விட்டன. வாதிட்டவர்கள் நினைத்திருந்த சரித்திர தவறுகள் தவறுகளே அல்ல என்று ஆயிற்று. பெல்ஷாத்சார் பாபிலோனில் அரசாண்ட பொழுது அவரின் அப்பா நெபோனிடஸ் பெர்சியர்களுடன் போராடினதை சரித்திரம் சொல்கிறது. போராட்டமே இல்லாமல் பாபிலோன் வீழ்ந்துவிட (தானியேல் 5: 30), தரியு ராஜாவாக்கப்பட்டான். இன்னும் பல விவரங்கள் தானியேலின் பல சரித்திரத் தகவல்களின் துல்லியத்திற்கு சாட்சியிடுகிற விதமாய் அமைந்திருக்கின்றன.
தானியேல் மட்டுமல்ல... அவனின் நண்பர்களாக இருந்த சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோமே கூட வெறும் கதாபாத்திரங்கள் அல்ல, சரித்திரபூர்வமானவர்கள் என்பதற்கு ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன.

Archaeology and Biblical Researchன் இதழ் ஒன்றில் வில்லியம் எச். ஷியா (William H. Shea) என்பவர் இது பற்றி தன் ஆய்வுக்கட்டுரையை எழுதியிருக்கிறார். நமது கட்டுரைக்கும் இதுவே ஆதாரமாகும். 

தானியேலின் நண்பர்களான அனனியா, மீஷாவேல், அசரியா என்பவர்கள் வேதாகமக் குறிப்புகளின்படி பாபிலோனுக்கு சிறைப்பிடிக்கப்பட்டுப்போய் பின் பல்வேறு சம்பவங்களுக்குப் பிறகு பாபிலோனிய அரசில் மிக உயர் பதவிகளைப் பெற்றுக் கொள்கிறார்கள். 

இதை சாவியாக வைத்துக் கொண்டு Ancient Mesopotamia: Portrait of a Dead Civilization by A. L. Oppenheim 'ஆதிநாட்களின் மெசபடோமியா: இறந்துபோன நாகரீகம் பற்றின வரைவு' என்ற தலைப்பில் பாபிலோனிய அரசின் செயல்பாடுகள் பற்றி விரிவாக எழுதப்பட்ட புத்தகத்தினுள் தேடிப்பிடிக்கும்பொழுது, கண்முன் விரிகிற விவரங்கள் வியப்படைய வைக்கின்றனவாம். 

அதில் பாபிலோனிய அரசு அமைப்பில் 'ரப் டாம்காரி' (Rab tamkari) அதாவது 'பிரதான வாணிகன்' (Chief Trader)  என்று அழைக்கப்படுகிற அரசின் உயர் அதிகாரியாக பதவி வகுத்தவர் இரண்டாம் நேபுகாத்நேச்சாரின் காலத்தில் இருந்தவர் ஹனுனு (Hanunu) அல்லது ஹனூ (Hanno). இவர் ஒரு பெனிக்கியராக (Phoenician) இருக்கக்கூடும் என்ற குறிப்பு இருக்கிறது.

'ஹனுனு' (Hanunu) நிச்சயம் இயல்பான பாபிலோனியப் பெயராக இருக்க முடியாது. இந்தப் பெயரில் வருகிற 'ஹனன்' (Hanan) சொல்லுக்கான பொருள் 'கிருபையுடனிருப்பது' (To be gracious) என்பதாகும். இச்சொல்லாக்கம் பாபிலோனிய மொழியில் இல்லாதது. ஆனால் இந்த வார்த்தை மேற்கத்திய சீரிய, பாலஸ்தீன பகுதிகளில் பேசப்படுகிற மொழிகளில் (Phoenician Language) உண்டாம். இதில் பெனிக்கியாவும் அடக்கம். பெனிக்கியர்கள் சிறந்த வியாபாரிகள் என பெயர் பெற்றவர்கள். எனவே ஹனனு ஒரு பெனிக்கியராக இருக்கக்கூடும் என்கிற யூகத்தில் தவறில்லை தான். ஆனால் அப்படித்தான் இருக்க வேண்டுமா? ஏன், இந்த ஹனனு ஒரு எபிரேயனாக இருக்க முடியாது என்றும் யோசித்துப் பார்க்கலாம். ஏனெனில் ஹனனு என்ற பெயரின் மூலம் எபிரேய மொழியிலும் உண்டு. அப்படியானால் இந்த 'ஹனனு' என்ற பெயர் தானியேலின் நண்பனான அனனியாவுக்கு நெருங்கி வருகிறதல்லவா?

இந்த 'ஹனனு', 'அனனியா' (Hananiah) இரு பெயர்களுக்கும் உள்ள வித்தியாசத்தைப் பார்க்கையில்...

பெயரின் இறுதியில் வருகிற ஒன்று இருப்பதைக் கவனிக்கலாம். பொதுவாக 'யா' (...iah) என்று முடிகிற பெயர்கள் கடவுளின் பெயரை அடிப்படையாகக் கொண்டவைகளாகும். எபிரேய மொழியில் குறிப்பாக அதாவது 'அனனி' என்ற பெயர் 'யா'வுடன் சேர்ந்து ('யா' என்பது யாவே (Yahweh) என்னும் கடவுளின் பெயரின் சுருக்கமாகும்) அனனியாவாகி இருக்கலாம். எனில் இந்த இரு பெயர்களும் ஒன்றாக இருந்திருப்பதற்கு பெரிய தடை ஏதுமில்லைதான்.
எபிரேய வேதாகமத்தில் இப்படி இருக்கிற உதாரணங்கள் உண்டு. உதாரணத்திற்கு நெகேமியா 7: 2ல் நெகேமியா தன் சகோதரனைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது 'அனானி' என்று சுருக்கமாகவும், அதே வசனத்தின் பிற்பகுதியில் அனனியா என முழுப் பெயரையுமே குறிப்பிடுவதை நாம் காணமுடிகிறது.

(பல வேதாகமங்களில், நம் தமிழ் வேதாகமத்திலும் கூட இந்த வசனம் இருவேறு நபர்களைப் பற்றி குறிப்பிடுவதைப் போலத்தான் இருக்கிறது. ஆனால் மூலமொழியின்படி அது ஒரே நபர் தான் அனானி என்கிற அனனியா என்பதை நாம் நினைவுப்படுத்தி கொள்ள வேண்டும்.)

ஆக, இதை எப்படி நாம் விளங்கிக் கொள்ள வேண்டுமெனில், உண்மைப்பெயர், பாபிலோனில் இருந்தபொழுது பல்வேறு சூழ்நிலைகளில் சற்றே மருவி, மாறி இருந்திருக்கக் கூடிய வாய்ப்புகள் இருந்திருக்கின்றன. அதை வைத்துக் கொண்டு பார்த்தால், பாபிலோன் அரசில் உயர் அதிகாரியாக இருந்த ஹனுனுவும், 'அனானி' அல்லது அனனியாவும் ஒரே நபராகத்தான் இருந்திருக்கக் கூடும்.

இனி மற்ற நண்பர்கள் விஷயத்திற்குப் போகலாம். தானியேலின் இன்னொரு நண்பர் அசரியாவுக்கு 'ஆபேத்நேகோ' என்று பெயர் வழங்கப்பட்டதாக வேதாகமம் கூறுகிறது. இந்தப் பெயரின் அர்த்தம் என்னவெனில் முதல் பகுதியான 'ஆபேத்' என்பதற்கு 'ஊழியன்' என்பதாகும் (எபிரேய மொழியில்). பொதுவாக இப்படியான பெயர்கள் ஒரு தெய்வத்தின் பெயரோடு சேர்க்கப்பட்டு வழங்கப்படும். அதாவது அந்த தெய்வத்தின் ஊழியன் என்று பொருள்படும்படியாக.
உதாரணமாக எரேமியா 38ல் வருகிற 'எபெத்மெலேக்' (எரேமியா 38: 7) என்னும் பிரதானியின் பெயருக்கு அர்த்தம் ராஜாவின் ஊழியன் (The King's servant) எனலாம். (ஏபேத், ஆபேத் இரண்டுமே ஒரே அர்த்தமுள்ளவை) பல தெய்வ வணக்கம் பரவியிருந்த பாபிலோனில் ஏதாவது ஒரு தெய்வத்தின் பெயராக 'ஆபேத்நேகோ' பெயரின் பின் பகுதியில் உள்ள 'நேகோ' இருந்திருக்கலாம். ஆனால் 'நேகோ' என்ற பெயரில் எந்த ஒரு தெய்வத்தின் பெயரும் இல்லை என்பதால் 'நேகோ' என்பதுவுமே மருவிப் போனதொன்றாக இருக்கக்கூடும்.
எனில், புகழ்பெற்ற ஒரு குட்டி தெய்வமான 'நேபு' - 'நேகோ'வாகி இருக்கலாம் ஒரு வித்தியாசத்தில் (ஒரு சமயம் இதை தமிழில் விளங்கிக்கொள்வது சற்றே சிரமம் தான். பாபிலோனிய மொழியில் இரண்டுக்குமான வித்தியாசம் ஒரே எழுத்துதான் என்பது கவனிக்கத்தக்கது).

எதற்காக, எப்படி இந்த சிறு வித்தியாசம் இருந்திருக்குமெனில், அதை விளக்கவும் நமக்கு குறிப்புகள் உண்டு. தானியேல் தன் நண்பர்களுக்கு பாபிலோனியப் பெயர்கள் வழங்கப்பட்ட பொழுது அந்தப் பெயர்களின் அர்த்தங்களில் பாபிலோனிய தேவர்களின் காரியங்கள் வந்துவிடாதபடி ஒரு சில எழுத்துக்களை மாற்றி சாதுரியமாக செயல்பட்டிருக்கலாம்.

(இது எப்படியெனில் தானியேல் தனக்கு வைக்கப்பட்ட பெல்ஷாத்சார் என்ற பெயரில் பெல்/பால் தெய்வத்தின் பெயருடன் தொடர்புப்படுத்தி விடுவதை அறிந்து அதன் முழு அர்த்தத்தையும் நாசுக்காக மாற்றி விடுகிற விதமாய் பெல்தெஷாத்சார் என்று வைத்துக் கொண்டதை நினைவில் கொள்வது நல்லது. இது பற்றி விரிவாக பிறகு பார்க்கலாம்.)

இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தைக் கவனிக்கலாம். சற்று முன்பாக நாம் பார்த்தபடியே எபிரேய மொழியில் ஆபேத் / ஏபேத் (Abed & Ebed) இரண்டுமே ஒரே அர்த்தம் தருபவைகள்தாம். இதற்கு இணையான பாபிலோனிய வார்த்தைகளைச் சொல்ல வேண்டுமெனில் அர்டு / அர்டி (Ardu / Ardi) எனலாம். இதை வைத்துப் பார்க்கும்பொழுது ஆபேத்நேகோ என்பதற்கான பாபிலோனிய இணை அர்டிநேபு / அர்டுநேபு என்றாகிறது. (நேகோ எப்படி நேபு ஆனதென்று முன்பாகவே பார்த்துவிட்டோம்!) இதன் அர்த்தம் நேபுவின் ஊழியன் என்பதாகும். இந்த முடிவு இன்னொரு பெரிய வெளிச்சத்திற்குள் நம்மைக் கொண்டு போகிறது. 

எப்படியெனில் இந்த ஆபேத்நேகோவின் பாபிலோனிய மூல பெயரான 'அர்டிநேபு', பாபிலோனிய ராஜாவின் பிரதானிகளின் பெரிய பட்டியலில் இருக்கிறது. மட்டுமல்ல, அது முன்பாக நாம் பார்த்த ஹனுனு இடம்பெற்ற பட்டியலுமாகும். 

இந்த நெடிய பட்டியல் நேபுகாத்நேச்சாரின் அரசு அமைப்பு பற்றினது. இது நேபுகாத்நேச்சாரின் இஸ்தான்புல் பட்டகமென்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில் இது இஸ்தான்புல்லில் உள்ள அருங்காட்சியகத்தில் தான் கண்டெடுக்கப்பட்டதாகும். இதில் உள்ள அதிகாரிகளிடத்தில் தான் ராஜா தன் ஆட்சிப் பொறுப்புகளை பகிர்ந்தளித்திருந்தான். இந்தப் பட்டியலின்படி, 'அர்டிநேபு'விற்கு நேபுகாத்நேச்சாரின் மகனும், பட்டத்து இளவரசனுமாயிருந்தவனுக்கு ஒரு செயலாளனைப் போல இருக்கிற பொறுப்பு தரப்பட்டிருந்தது. அந்த பட்டத்து இளவரசனுக்கு 'ஆமெல் மர்டூக்' (Amel-Marduk) என்று பெயர். தன் தகப்பன் இறந்த பிறகு, இவன் ராஜாவானாலும், இரண்டு வருஷங்கள் ஆட்சி செய்தபிறகு அவன் கொலை செய்யப்பட்டு விடுகிறான்.

இங்கு மிகவும் சுவாரசியமான குறிப்பு என்னவெனில் இரு வருடங்களே ஆட்சி செய்திருந்தாலும், இவனைப் பற்றிய குறிப்பு வேதாகமத்தில் உண்டு. (2இராஜாக்கள் 25: 27, 28) 'ஏவில் மெரொதாக்' (Awel-Marduk אֱוִ֣יל מְרֹדַךְ֩) என்று தமிழ் வேதாகமத்தில் இவன் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த பாபிலோன் ராஜா சிறை பிடிக்கப்பட்டிருந்த யோயாக்கீனுடைய சிறையிருப்பை மாற்றி அவன் நிலையை உயர்த்தி, வெகு அன்பாக நடத்தி... (சாதாரணமாக இல்லை!) எல்லோருக்கும் மேலாக உயர்த்தி... என்றெல்லாம் 2இராஜாக்கள் 25ம் அதிகாரத்தின் இறுதியில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த திடீர் மாற்றத்தின் ரகசியம் என்ன?

NIVயின் Study Bibleன் குறிப்புகளில் கூட இந்த பகுதிகளுக்கான விளக்கத்தில் காரணம் ஏதும் தரப்படவில்லை. 'ஒருவேளை பொதுவான மன்னிப்பாக, புது அரசின் போக்கைக் காட்டுவதைப் போல அமைந்திருக்கலாம்' என்று தான் இருக்கிறது. ஆனால் அப்படியல்ல, யோயாக்கீன் மேல் தனியான அன்பும், கரிசனையும் வந்ததை வாசிக்கிறோமே... இந்த மாற்றத்தின் ரகசியம் புரியாத புதிராகவே இருந்து வந்தது. ஆனால் இப்பொழுது அந்த புதிருக்கான விடை முதல் முறையாகக் கிடைப்பதைப் போலிருக்கிறது.

எப்படி? இந்த புதிய பாபிலோன் ராஜாவான ஏவில் மெரொதாக்கின் செயலாளரைப் போலிருந்த அர்டிநேபு எனப்படுகிற ஆபேத்நேகோ பாபிலோன் ராஜாவின் அந்த புதிரான மாற்றத்திற்கு மூலகாரணமாக இருந்திருக்க வேண்டும். ஆபேத்நேகோ தன்னுடைய செல்வாக்கினை புதிய ராஜாவாகிவிட்ட தன் எஜமானனிடம் பிரயோகித்து, தங்கள் யூத ராஜாவிற்கு சிறையிருப்பை நீக்கி, புதிய வாழ்க்கை கிடைக்க வைத்திருக்க வேண்டும். வியப்பாக இருக்கிறதல்லவா?
இப்படி கதை மாந்தர்களாகக் கருதப்பட்ட அனனியா (சாத்ராக்), அசரியா (ஆபேத்நேகோ) அவர்களை பாபிலோனின் சரித்திரத்தில் கண்டுபிடித்துவிட பிறகு தானியேலின் மற்றுமொரு நண்பனையும் தேடிப் பார்க்கலாம். மீஷாவேல் எங்கே? வில்லியம் எச். ஷியா இதற்கும் விளக்கமளிக்கிறார்.

மீஷாவேலுக்கு 'மேஷாக்' என்று பிரதானிகளின் தலைவன் மறுபெயரிட்டான் என்று வேதாகமக் குறிப்பு உண்டு. நேபுகாத்நேச்சாரின் நீண்ட பட்டியலில் அரசப் பிரதானிகளின் பெயர் பட்டியலில் ஒரு பெயர் உண்டு, நம் கவனத்தைக் கவர. முஷாலிம் மர்டுக் (Mushallim-Marduk) இந்த பிரதானிக்கு ராஜ அரண்மனையில் உள்ள பெண் அடிமைகளின் கண்காணிப்பாளராக பதவி கொடுக்கப்பட்டிருந்தது. சற்று யோசித்தால் இவன் பெயரில் மேஷாக் ஒளிந்திருப்பதை யூகிக்கலாம். 

முஷா(லிம் மர்டு)க் இந்த முஷாக், மேஷாக் என்பதின் மருவலாக இருக்க சாத்தியமுண்டு. ஆனால் இந்த மேஷாக் விஷயத்தில் அனனியா, அசரியா விஷயங்களில் நாம் கண்டறிய வந்ததைப் போல தெளிவான விவரங்கள் இல்லை என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். என்றாலும் தானியேலின் நண்பர்கள் இருவருக்கும் தெளிவான நிரூபணங்கள் காணக்கிடைக்கிற பொழுது மூன்றாவது ஆளான 'மேஷாக்'கை இப்படியாக யூகிப்பதற்கு இடம் இருக்கிறது தானே.
சரி, இனி நாம் தானியேலின் விஷயத்திற்கே வருவோம். தானியேலின் பாபிலோனியப் பெயர் பெல்தெஷாத்சார் (Belteshazzar). இந்தப் பெயர் தானியேல் 5ல் வருகிற பெல்ஷாத்சார் என்கிற பெயரோடு நெருங்கிய ஒற்றுமையுடனிருப்பதைக் கவனித்திருக்கலாம். இரண்டு பெயர்களுக்குமான வித்தியாசம் ஒரு எழுத்து மட்டுமே.
பெல்'தெ'ஷாத்சார் (Bel te shazzar)  - தானியேல் 
பெல்ஷாத்சார் (Belshazzar)               - பாபிலோன் ராஜா 
ஆனால் இந்த ஓர் எழுத்து வித்தியாசம் வெகு வலுவானது. 'பெல்ஷாத்சார்' என்பதை மூன்றாகப் பிரிக்கலாம். பெல்-ஷாத்-சார் (Bel-Shaz-Usur) இதில் கடைசி வார்த்தைக்கான அர்த்தம் 'காப்பது' அல்லது 'பாதுகாப்பது'. நடு வார்த்தையின் பொருள் 'ராஜா' அல்லது 'அரசன்'. முதல் வார்த்தை 'பெல்' அதாவது (தமிழில்) 'பால்' தேவனைக் குறிப்பதாகும். அந்த 'பால்' பாபிலோனின் முக்கிய தெய்வமாகும். ஆக இந்த முழுப்பெயரின் அர்த்தம் 'பெல் (பால்) தேவன் ராஜாவைக் காப்பாராக' என்பதாகும்.

தானியேலுக்கு இந்தப் பெயர் தான் வைக்கப்பட்டிருந்ததாக நேபுகாத்நேச்சார் சொல்வதை தானியேல் 4: 8ல் பார்க்கலாம். ஆனால் வைக்கப்பட்ட பெயரில் எழுத்துக்களின் அமைப்பில் ஒரு சிறிய மாற்றத்தை தானியேல் சாதுர்யமாக செய்திருக்க வேண்டும். ஒரு சமயம் 'அலுவலக அரசு ரீதியாக' அந்த சிறு மாற்றம் இல்லாவிட்டாலும் பேச்சுவழக்கத்தில் மட்டும் அது இருந்திருக்கக் கூடும். அது என்ன மாற்றம்? அதன் விளைவு என்ன என்று பார்த்தால் ஒரு வியப்பு நமக்கு காத்திருக்கிறது. சற்று முன்பு பார்த்தபடியாக தன் பெயரின் நடுவில் ஒரு எழுத்தை வைத்து கொள்கிறான் தானியேல். தமிழில் இதை விளக்குவது சிரமமென்றாலும் முயற்சிக்கலாம். 'தெ' என்ற எழுத்து (பெல்)ஷாத்சாரில் இப்படியாக வருகிறது விளைவு, இந்தப் பெயரின் அர்த்தம் முற்றிலுமாக மாறிப்போனதாம். வேறு அர்த்தத்தோடு பெயரின் பொருள் தொனிக்கிறது.

தானியேல் 5ல் சுவரில் எழுதப்பட்டவைகளை வியாக்கியானம் செய்ய தானியேல் அழைக்கப்பட்டபொழுது ராஜாவுக்கும், தானியேலுக்கும் பெயர் ஒரே விதமாய் இருப்பதால் தான், ராஜா தானியேலுடன் பேசும்பொழுது (தானியேல் 5: 13ல்) தானியேலின் எபிரேயப் பெயரை மட்டும் சொல்வது குறிப்பிடத்தக்கது. இது தவிர்த்து பல இடங்களில் தானியேல் என்கிற எபிரேயப் பெயரோடு, பாபிலோனியப் பெயரும் சேர்ந்தே பயன்படுத்தப்படுவதை நாம் காணலாம். (தானியேல் 2: 26 / 4: 8, 9, 18, 19).

ஆக இதன் மூலம் நாம் கண்டுணர்வது என்னவெனில் தானியேலுக்கு 'பெல்தெஷாத்சார்' என்கிற பெயரும் அரசு நடவடிக்கைகளில் இருந்திருக்கக்கூடும் என்பதுதான். இந்த முடிவோடு நாம் முன்பு சொல்லப்பட்ட இஸ்தான்புல்லின் நேபுகாத்நேச்சாரின் அரசுப் பட்டத்திற்குள் போய் பார்க்கலாம்.

ஒரு சமயம் தானியேல் 5ன் ராஜாவாகிய 'பெல்ஷாத்சாரின்' பெயரும் இதில் வந்துவிட வாய்ப்புகள் இருக்குமே என்று யோசிக்கக் கூடும். அதற்காக, அந்த தானியேல் 5ன் காலகட்டத்திற்குள் நாம் போகாமல் அதற்கு முன்பாக இருக்கிற வருஷங்களில் உள்ள பிரதானிகளின் பட்டியலில் தேடுவோமென்றால் பல இடங்களில் தானியேலாகிய 'பெல்ஷாத்சாரை' கண்டறிய முடிகிறது!

உதாரணமாக முன்பாக குறிப்பிடப்பட்ட நேபுகாத்நேச்சாரின் மகனும், பாபிலோன் சரித்திரப்படி அமெல் மர்டுக் என்று அறியப்பட்டவனும், வேதாகமக் குறிப்பின்படி 'ஏவில் மெரொதாக்' என்று குறிப்பிடப்பட்டவனுமாகிய பாபிலோன் ராஜாவின் ஆட்சிக்காலத்திலும், அதற்குப் பின்பு ஆட்சிக்கு வந்த நெரிகிளிசார் (Neriglissar) ஆரம்ப காலங்களிலும் அநேகமாக இன்றைய நாட்களின் தலைமைச் செயலாளரைப் போன்ற பதவியில் இருந்தவர் (அதாவது Chief Officer of the King) பெல்ஷாத்சார் என்றிருக்கிறது. அதாவது இது நமது தானியேலாகத் தான் இருந்திருக்க வேண்டும். (ஏனெனில் இந்த காலக்கட்டத்தில் தானியேல் 5ன் பெல்ஷாத்சார் வரவே வாய்ப்பில்லை!) இதற்கு ஆதாரமான களிமண் சுவடுகள் இன்றைக்கும் இத்தாலி நாட்டில் உள்ள புளோரன்ஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன.

2இராஜாக்கள் 25: 27-30ல் வருகிற யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனுடைய புதிய நிலைமைக்கு, அந்தப் புதிருக்கு ஆபேத்நேகோவின் செல்வாக்கு காரணமாக இருக்கலாம் என்று பார்த்தோம். அச்சமயத்தில் தானியேலுமே அரசப் பிரதானியாக இருந்ததால், தானியேலும் கூட இன்னொரு காரணமாக இருந்திருக்கவும் வாய்ப்பு உண்டு. மட்டுமல்ல, ஆபேத்நேகோவின் செல்வாக்கு பாபிலோன் ராஜாவை யோயாக்கீனுடைய விஷயத்தில் அப்படியாக செயல்பட வைத்திருக்குமெனில், அதே செல்வாக்கு இன்னொரு எபிரேயனாகிய 'தானியேல்' முக்கிய ராஜ பிரதானியாக இருக்கவும் காரணமாக இருந்திருக்கலாம்.

ஏவில் மெரொதாக் கொலை செய்யப்பட்டு ஆட்சிக்கு வந்த நெரிகிளிசாரின் (Neriglissar) ஆட்சிக் காலத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. அரசு மாறும்பொழுது முந்தைய அரசின் முக்கிய அதிகாரிகள் தூக்கியெறியப்படுவதை, மாற்றப்படுவதை இன்றைய நாட்களிலும் பார்க்கிறோமே... அதன்படி முக்கிய பொறுப்பிலிருந்த தானியேல், ஒரு சாதாரண முக்கியத்துவம் அற்ற பொறுப்பிற்கு மாற்றப்பட்டு விட்டிருக்க வேண்டும்.

அதனாலேயே பின் வந்த ஆட்சிக்காலத்தில் வந்த 'பெல்ஷாத்சார்' தானியேலை அதிகமாக அறிந்திருக்கவில்லை. சுவரில் கை எழுதின பிரச்சனை வந்தபொழுது, தானியேலைப் பற்றி முன்பாகவே அறிந்திருந்த ராஜாத்தி ராஜாவிடம் பிரஸ்தாபிக்க, ராஜாவின் உள்வட்டத்திற்குள் இராமல் தள்ளி இருந்து கொண்டிருந்த தானியேலை அழைத்து வரச் சொல்கிறான் ராஜா (தானியேல் 5: 13). பின் 16ம் வசனத்தில் 2ம் பழைய நிலைமையை, அந்தஸ்த்தைத் தருவேன் என்றபொழுதிலும்கூட 17ம் வசனத்தின் ஆரம்பத்தில் தானியேலின் மறுமொழியில் அவன் மனதில், தான் ஒதுக்கப்பட்டிருந்ததின் வெறுப்பைக் கோடிட்டு காட்டுவதைப் போல தெரிகிறது.
இன்னும் பலவிதமான கூறுகளை எடுத்துக் கொண்டு, சரித்திர நிகழ்வுகளோடு ஒப்பிட்டு சரி பார்த்துக் கொண்டே போக நிறைய விஷயங்கள் உண்டு. தரியு விஷயத்திலிருந்து... போராட்டமின்றி பாபிலோன் வீழ்ந்ததிலிருந்து... நிறைய!

இப்படியாக தானியேலின் புத்தகம் புராணக் கதைகளைக் கொண்டதென்றும், சரித்திரத் தவறுகள் ஏராளமென்றும் சொல்லப்பட்டவைகள் இன்று வலுவிழந்து போய்விட, வேதாகம வார்த்தைகளின் உண்மைகளும், சரித்திர துல்லியங்களும் இப்பொழுது பலரையும் பிரமிக்க வைக்கின்றன.
"கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது."
-சங்கீதம் 19: 7
-எட்வினா ஜோனஸ்