Saturday, November 07, 2015

அறியாமலிருக்கும் அற்புதங்கள் - 8


சென்ற இதழில் நாம் நம் தேசத்தின் வடகிழக்கு பகுதியில் உள்ள சந்தால் குடிகளின் காரியங்களைப் பற்றி அறிந்து கொண்டோம். இம்முறையும் இன்னொரு பழங்குடிகள் பற்றி பார்க்கப் போகிறோம். இவர்கள் நம் இந்தியாவிற்கு அருகில் உள்ள தற்போதைய மியான்மர், அந்நாளின் பர்மா தேசத்தில் வசித்து வருகிற மலைஜாதி மக்களாவர்.

கரண் (Karen) என்று அழைக்கப்படுகிற இவர்கள் அத்தேசத்தின் ஜனத் தொகையில் 7%க்கும் அதிகமாக இருப்பவர்கள் என்பது ஒரு விஷேசம். அங்கு மட்டுமல்ல, தாய்லாந்திலும் கூட இக்கூட்ட மக்கள் ஏராளமாய் உண்டு.


ஒரு வினோதமான விஷயம் என்னவெனில் இந்த பழங்குடி மக்களுக்கும், அவர்களோடு எப்போதும் வசித்து வரும் பர்மியர்களுக்கும் எப்போதுமே சுமூக உறவுகள் இருந்ததில்லை. இந்த உறவுச் சிக்கல் சமீப காலங்களில் வேறுவித வடிவம் எடுத்திருப்பது பற்றி கடைசியில் நாம் பார்க்கப் போகிறோம். 


மானுடவியலாளரான டான் ரிச்சர்ட்சன் (Don Richardson) இவர்களைப் பற்றி தன்னுடைய நூலில் குறிப்பிடும் பொழுது, இந்த சுவாரசியமான சம்பவத்தைக் குறிப்பிடுகிறார்.

கி.பி.1795ல் பர்மாவில் உள்ள ரங்கூனின் ஒரு கிராமம். இருக்கும் கடும் வெய்யிலுக்காக தொப்பி அணிந்திருந்த ஒரு ஆங்கிலேயரைக் கூடி கொண்டு அந்த கிராமப் பகுதிகளுக்குப் போகிறான் ஒரு பர்மிய வழிகாட்டி. ஆர்வத்துடன் கேட்டார் அந்த ஆங்கிலேயர்.

"இந்த கிராமத்தில் உள்ளவர்கள் எல்லாம் பர்மியர்கள் இல்லை என்றால், இதோ இருக்கிற இவர்களை என்னவென்று சொல்ல வேண்டும்?"


"கரன் (Karen)" என்று வழிகாட்டி பதில்தர, அதை சரிவர உச்சரிக்கக் கூட முடியவில்லை அவருக்கு.


"உள்ளே போய் அவர்களை எல்லாம் பார்க்க வேண்டும்" என்று ஆங்கிலேயர் சொல்லவும், போனார்கள். ஆனால் அவருடைய ஆர்வத்தை விடவும், அவரை பார்க்கவென்று திரண்ட கரன் குடி மக்களின் ஆர்வம் அதிகமாய் இருந்தது. முதல் தடவையாக ஒரு வெள்ளைக் காரரை பார்ப்பது அவர்களுக்கு பரவசத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும். விளக்கை, விட்டில் பூச்சிகள் மொய்ப்பதைப் போல அந்த ஆங்கிலேயரைச் சுற்றிக் கொண்டார்கள். சிலர் அவரை மெல்ல தொட்டுத் தொட்டு பார்க்கத் துவங்கினர். கூட வந்திருந்த பர்மிய வழிகாட்டி அவரிடம் மிகுந்த பொறுமையுடன், "இந்த ஆட்களிடம் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். இந்த மலை ஜாதி மக்கள் திருடுவதிலும், சண்டை போடுவதிலும் சமர்த்தர்கள்" என்று அங்கலாய்த்திருக்கிறான். 



ஆனால் உண்மை அதுவல்ல.  கரன் பழங்குடிகள் பர்மாவில் அப்போதிருந்த பிற பழங்குடி மக்களை விடவும் பலவழிகளிலும் முன்னேற்றமடைந்தவர்கள் தாம்.  ஆனாலும் பல விதங்களில் அநேகரால் சுரண்டப்பட்டு, தவறாக கையாளப்பட்டு, சொல்லப்போனால் வீணான இந்த பழிச் சொல்லுக்கு தள்ளப்பட்டார்கள் எனலாம்.

பர்மிய பௌத்தர்கள் இந்த சிறுபான்மையினராய் இருந்த கரன் குடிகளை வெறுக்க இன்னொரு காரணமிருந்தது. பௌத்த மதத்திற்கு அவர்களைச் சுற்றி இருந்த பலரும் மாறிக் கொண்டிருந்த சூழலில், இந்தக் குடிகள் மட்டும் தங்களின் மத ரீதியான நம்பிக்கைகளை மிகவும் பிடிப்புடன், பிடிவாதத்துடன் பற்றிக் கொண்டிருந்ததுதான் அந்த காரணம்.

ஆனால் அந்த ஆங்கிலேயரோ பர்மிய  வழிகாட்டியின் எச்சரிக்கையை கண்டுக்கொள்ளவில்லை. களங்கமில்லாமல், அந்த கரன் குடிகள் தன்னைச் சூழ்ந்து கொண்டு, தொடர்பு கொள்ள முயன்றது அவருக்குப் பிடித்திருந்தது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் மலர்ந்து புன்னகை மாறாதவர்களாய் இருந்தது அவரைக் கவர்ந்தது. ஏனோ ஆங்கிலேயர்கள், அந்நியர்கள் என்றாலே ஒதுங்கி நின்று சந்தேகமாய்ப் பார்க்கிற பிற பர்மிய இன மக்களோடு ஒப்பிட்டு பார்க்க வைத்தது அவரை.


அதற்குள் அந்த வழிகாட்டியிடம், பர்மிய மொழி பேசத் தெரிந்த ஒரு கரன் மனிதர் எதையோ விவரிக்க, அவன் ஆச்சர்யத்துடன் அந்த ஆங்கிலேயரிடம்...


"ஐயா... இவன் சொன்னது மிகவும் சுவாரசியமனதொன்று, பாருங்களேன், இந்த பழங்குடி மக்கள் தற்போது என்ன நினைக்கிறார்கள் என்றால், அவர்கள் காலகாலமாய் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிற 'வெள்ளைக்கார' சகோதரர் நீங்கள் தானோ என்று கேட்கிறார்கள்."


அந்த ஆங்கிலேயருக்கு ஆச்சர்யம் தாங்க முடியவில்லை. "என்ன வினோதம் இது? அவர்கள் அந்த வெள்ளைக்கார சகோதரன் என்ன கொண்டு வருவார் என்று அப்படி எதிபார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்களாம்?"


"அவர் ஒரு புத்தகத்தை கொண்டு வருவாராம். அந்த புத்தகம் அவர்களின் முன்னோர்கள் முன்நாட்களில் தவற விட்டு விட்டதாம். அதை ஒரு சமயம் நீங்கள் கொண்டு வந்திருப்பீர்களோ என்று மிகவும் பதைபததைப்புடன் கேட்கிறார்கள்."


இப்பவும் புரியவில்லை அந்த ஆங்கிலேயருக்கு.  'இந்த படிப்பு வாசனையே இல்லா இந்த மக்களை அந்த அளவிற்கு கவர்ந்த்திருக்கிற அந்த புத்தகத்தை எழுதினவர் யார் என்று தெரியுமா என்று கேள்' என்று வழிகாட்டியிடம் சொல்ல, அவர்கள் சொல்வதை மொழிபெயர்த்து சொல்ல ஆரம்பித்தான்.


"எல்லாவற்றையும் படைத்த கடவுளான 'ywa' தான் அந்த புத்தகத்தை எழுதியவராம்..." என்று துவங்கின பர்மிய வழிகாட்டியின் முகம், அவர்கள் அடுத்து பேசினதைக் கேட்டதும் வெளியேறிப் போயிற்று. என்றாலும் தடுமாற்றத்துடன் சொன்னான்.


"அந்த புத்தகத்தின் மூலமாக, தங்களை அடக்கியாண்டு கொண்டிருக்கிற எல்லாவற்றிலிருந்தும் விடுதலை பெற முடியுமாம்."


உண்மையில் வந்த ஆங்கிலேயர் யாரெனில் பர்மியர்களுக்கும், பிரிட்டனுக்கும் உள்ள கருத்து வேறுபாடுகளை பேசித் தீர்க்க வந்த குழுவில் ஒருவராகும்.  பர்மியர்களுக்கு பிரிட்டன் தங்களின் மகா சாம்ராஜ்யத்திற்குள் பர்மாவை இணைத்துக் கொண்டு விடுவோமென்கிற பயங்களிருந்த காலமது. இந்த சூழலில் கரன் குடிகளில் ஒருவர் இப்படிச் சொன்னால் எப்படி இருந்திருக்கும்? எதோ வலிய பிரிட்டனை வந்து எடுத்துக்கொள்ள சொல்வதைப் போல் இருக்குமல்லவா? பர்மிய வழிகாட்டி முகம் வெளிறிப் போனதில் வியப்பில்லைதான்.


நிலைமையைப் புரிந்து கொண்ட அந்த ஆங்கிலேயர் யோசிக்கலானார். அவசரமாய்ச் சொல்லி விடுகிற எந்த ஒரு வார்த்தையுமே பெரிய கலவரத்தையும், குழப்பத்தையுமே ஆரம்பித்து விடலாம் என்றெல்லாம் யோசித்து விட்டு பிறகு கூறினார் வழிகாட்டியிடம்...


"அவர்களிடம் சொல்லுங்கள் உடனடியாக..." என்று உறுதியான குரலில் ஆரம்பித்தார். 'எனக்கும் அவர்கள் சொல்கிற கடவுளான  'ywa'விற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அது பற்றி சிறிதளவும் கூட தெரியாது. அவர்கள் எதிர்பார்த்திருக்கிற 'வெள்ளைக்கார சகோதரர் எவர் என்று கூட எதுவும் தெரியாது' என்று கூறிவிட்டு, வழிகாட்டியுடன் அந்த கிராமப் பகுதியில் இருந்து புறப்பட்டுப் போவதை கூடியிருந்த நூற்றுக் கணக்கான கரன் பூர்வ குடிகள் மிகவும் ஏமாற்றத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்களாம். நெடுகாலமாய் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தொன்று இப்போதுமே பொய்த்துப் போனதில் மிகுந்த ஏமாற்றமே அவர்களுக்கு.


"ஒருவேளை நம் முன்னோர்கள் தவறாக இப்படிச் சொல்லி இருப்பார்களோ" என்றான் கரண் இளைஞன் ஒருவன்.


"இல்லை கவலைப்படாதே, ஒரு நாள் நிச்சயம் அவர் வருவார். எந்த தீர்க்கத்தரிசனங்கள் நடக்காமல் போனாலுமே இது மட்டும் பொய்த்து போகாது" என்றார் கரண் முதியவர் வறண்ட புன்னகையுடன்.


கி.பி.1819. ஒரு முஸ்லீம் பயணி, நகரை விட்டு ஒதுக்கு புறமாய் இருக்கிற இந்த கரண் குடிகளின் கிராமப் புறங்களுக்கு போக நேர்ந்த பொழுது, உள்ளே வருகிற ஒவ்வொரு அந்நியரையும் ஆவலுடன் எதிர்பார்க்கிற கரண் குடிகள் இவரையுமே சுற்றி வளைத்துக் கொண்டார்கள். குறிப்பாக, தங்களைவிட சற்று நிறமாக வருகிற எவரையும், தாங்கள் எதிர்பார்த்திருக்கிற 'வெள்ளைக்கார சகோதரரோ' என்று தேடுகிற அவர்கள், சற்றே நிறமாய் உள்ள இந்த முஸ்லீம் பயணியிடமும், 'புத்தகம்' பற்றிக் கேட்க அவரும் ஒரு புத்தகம் தன்னிடத்தில் உண்டு என்றும் அதில் கடவுள் கூறின எழுத்துக்கள் அடங்கியிருக்கிறது என்று கூறி ஒரு புத்தகத்தை அவர்களிடம் கொடுத்தாராம்.


அவர்கள் வெகு பரவசமாய் அந்த புத்தகத்தை வாங்கிப் பார்ப்பதைக் கண்ட அவர், அதை அந்த கரண் குடிகளுக்கே தம் பரிசாகக் கொடுத்து விட்டார். அந்த புத்தகத்தைத் தொழுது கொள்ள வேண்டும் என்று அவர் சொன்னதாக ஒரு சேதி பரவிற்று. ஆனால் ஒரு முஸ்லீம் அப்படியான ஒரு யோசனையை கூறியிருப்பாரா என்பது சந்தேகமே. ஒரு சமயம் அப்புத்தகத்தை பவித்திரமாக வைத்து கொள்வது பற்றி கூறிவிட்டு, பிறகொரு நாள் வேறு ஏதாவது போதகர் வந்து அதைப் பற்றி விளக்கிக் கூறலாம் என்று சொல்லியிருக்கக்கூடும். அங்கிருந்து சென்ற பயணி பின்பு திரும்பி வரவே இல்லை.


ஆனால் புத்தகத்தை வாங்கிக் கொண்ட கரண் முதியவர் அந்த புத்தகத்தை ஒரு அழகான மஸ்லின் துணியால் சுற்றி அதற்கென்று ஒரு அழகான கூடையை தயார் செய்து அதில் வைத்தாராம். போகப் போக பல கரண் மக்கள் அதைக் கனப்படுத்தவேன்று அநேகம் சடங்குகளை செய்யத் துவங்கினது வேறு கதை.


இது ஒரு பக்கமிருக்க, கரண் குடிகள் இருக்கும் கிராமங்களில் புக்கோஸ் (Bukhos) என்றழைக்கப்படுகிற போதகர்கள் இருந்தார்கள். இவர்கள் தம்மை எல்லாவற்றையும் படைத்த கடவுளான 'Ywa' வின் பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொள்வதுண்டு. கரண் குடி மக்களுமே கூட இவர்களை 'Ywa' கடவுளின் தீர்க்கதரிசிகளாக பெரிதும் மதித்து வந்தார்கள். இவர்கள் 'Ywa' பற்றியும், அவர் வழிகளைப் பற்றியும் ஒரு புறம் போதித்து 'Ywa'வின் வழிகள் கெட்ட ஆவிகளின் வழிகளைப் போன்றதல்ல, மக்கள் தங்களின் தீய வழிகளை விட்டு முழுமையாக 'Ywa' விடம் திரும்ப வேண்டும் என்று போதிப்பார்களாம்.


அவர்களின்  சில பாடல்களைப் பார்க்கும் பொழுது நமக்கு வருவது பெரிதும் ஆச்சர்யமே. முன்பு நாம் பார்த்த 'இன்கா' சாம்ராஜ்யத்தில் வருகிற தெய்வமான 'விரகோச்சா' விற்கான 'பச்சக்குட்டியின்' பாடல்களின் சாயல், தன்மை இப்பாடல்களிலும் தெரிகிறது. 'Ywa' எப்படி ஒரே முழு முதல் கடவுளென பல பாடல்களின் கருப்பொருளாய் இருப்பது, பல தெய்வங்களைக் கொண்டிருக்கிற நாட்டுப்புற மத நம்பிக்கைகளில் ஒன்றாக பலர் கருதி 'கரணின்' நம்பிக்கையை எத்தனை வித்தியாசப்படுத்திக் காட்டுகிறது. பயத்தோடும், பக்தியோடும் இந்த 'Ywa' பற்றின சேதிகள் கரண் குடிமக்களிடம் காணப்படுகின்றன. அதில் ஒரு பாடலைப் பார்க்கலாமா...?

"யார் இவ்வுலகை ஆதிநாட்களில் உருவாகினது? 
'Ywa' தான் இவ்வுலகை துவக்கத்தில் உருவாகினது.                    
'Ywa' வே சகலத்தையும் நியமித்தார்.                                        
'Ywa' வே ஆராய்ந்து முடியாதவர்"
இப்படி பாடல்களில் சர்வ வல்ல ஒரே கடவுளின் தன்மை, பெருமை சிலாகிக்கப்படுகிறது.

கரண் குடிகளின் நடுவில் அனேக வருஷங்கள் வாழ்ந்த அனுபவத்தை உடையவர் எழுத்தாளர் Alonzo Bunker. 19வது நூற்றாண்டின் இறுதிகளில் இருந்தவர் அவர், தன் அனுபவங்களைப் பதிவு செய்யும் பொழுது, ஒரு மாலை நேரக் கூடுகையில் அவர்களில் ஒரு 'புக்கோஸ்' (போதகர்) நடத்தின விதத்தைப் பற்றி இப்படி எழுதுகிறார்.


'இந்த கூடுகையில் கூட இருக்கிற கரண் குடி மக்களின் பக்தி, ஒழுங்கு விவரிக்க முடியாத அளவிற்கு அருமையானது. வயது முதிர்ந்த பெரியவர்கள் தம் கடவுளான  'Ywa' பற்றி பேசும் பொழுது குழந்தைகளிலிருந்து, பெரியவர்கள் வரை காட்டுகிற கவனிப்பு சிலிர்க்க வைகிரதொன்றாகும். அப்படி எழும்பி பேசுகிறவர் பேசிக் கொண்டிருக்கும்பொழுது, இடையில் விழுகிற சில மௌன கணங்களில் மூங்கில்கள் காற்றில் உரசுகிற சப்தம் கூடத் துல்லியமாகக் கேட்கும். ஒருமுறை ஒருவர் இப்படியாகப் பேசினாராம்.

கரண் குடிகளின் பிள்ளைகளே, குழந்தைகளே  'Ywa' உங்களை, நம் கரணின் தேசத்தை எல்லாவற்றுக்கும் மேலாக நேசிக்கிறார். ஆனால் முன்நாட்களில் நம் மக்கள் வழி தவறி, மாறி அவருடைய கட்டளைகளை மீறி நடந்து கொண்டார்கள். அப்போதுதான் 'Ywa' நம்மை சபிக்க வேண்டியதாகிப் போனது. விளைவு நம்மின் இப்போதைய நிலைமை. நாம் அவரின் வழிநடத்துதலைச் சொல்கிற புத்தகம் இல்லாமல் கஷ்டப்படுகிறோம். ஆனால் இப்போதும் நம்பிக்கை உண்டு. 'Ywa' நம் பேரில் மறுபடி இறக்கம் காட்டப் போகிறார். நம்மை மறுபடியும் மிக அதிகமாக நேசிக்கப் போகிறார். நம்மை மறுபடியும் மீட்டெடுக்கக்கப் போகிறார்.

நம்மின் இந்த நிலைக்கு காரணம் நாம் மு கா லீ (Mu Kaw Lee) சாத்தானின் வார்த்தைகளுக்கு செவி கொடுத்தது தான் காரணம்....


அவரின் காந்த வார்த்தைகளில் மயங்கிப் போனவர்களை போல, கூட இருந்தவர்கள் எல்லோரும் இருந்தார்களாம்... அவர் தொடர்ந்து பேசினதை பதிவு செய்தவைகளைக் கேட்கும்பொழுது, நமக்குள் வியப்பு ஏற்படுவதை நம்மால் அடக்க இயலாது தான். அந்த பேசின பெரியவரின் விவரிப்புகளில் ஆதியாகமத்து சாயல் அப்படியே வெளிப்பட்டது தான். அதை சுருக்கமாகப் பார்க்கலாம்.

'எல்லாவற்றையும் படைத்த கடவுளான 'Ywa' ஆதியில் Tha-naஐயும், Ee-uவையும் ஆணும், பெண்ணுமாகப் படைத்தாராம். அவர்கள் வசிக்க ஒரு தோட்டத்தையும் தந்து, அதில் ஏழு வகைக் கனிகள் உள்ள ஏழு மரங்களையும் வைத்து இருந்தாலும், அதில் உள்ள ஒரே ஒரு மரத்தின் கனியை மட்டும் புசிக்கக் கூடாதென்றும், புசித்தால் வயது முதிர்ந்து, நோய்வாய்ப் பட்டு, இறக்க நேரிடும் என்று எச்சரித்திருந்தாராம்.

ஆனால் சாத்தானாகிய Mu Kaw Lee வந்து அவர்களிடம் தந்திரமாகப் பேசி, அந்த தடை செய்யப்பட்டிருந்த கனியைப் புசிக்க வைத்து...

பிறகு அவர்களை சந்திக்க  'Ywa' கடவுள் வந்து, அவர்கள் தம் கட்டளையை மீறினதில் கோபம் கொண்டு சபித்து அந்த தோட்டத்தை விட்டு துரத்தி விட்டாராம்.


(நாம் முந்தைய வலைப்பதிவில் படித்த சந்தாலி குடிகளின் முதியவர் ஒருவர் சொன்ன ஆதியாகமத்தின் சாயலைக் கொண்ட அந்த சம்பவக் கதையை விட இது இன்னும் நெருங்கி இருப்பதைக் கவனித்திருக்கலாம். ஆனால், சற்று மாறுபடுவது இனிமேல் தான்...)


சாபத்தை பெற்றுக் கொண்ட Tha-nai ம் Ee-u வும் மறுபடி சாத்தானை (Mu Kaw Lee) அணுகிப் பேச அவனும், தன் பேச்சுக்குத் தொடர்ந்து கீழ்படிய ஆரம்பித்தால் அவர்களுக்கு உதவுவதாகக் கூறி, ஒவ்வொரு பிரச்சினை, நோய்க்கும் அவனுடைய கேட்ட அவைகளுக்கு (nuts) காணிக்கை கொடுத்தல் பிரச்சனைகள் தீருமென்று ஆலோசனை சொல்வதாக.... கதைப் போகிறது....


என்றாலுமே அதே எழுத்தாளர் பதிவு செய்துள்ள கரண் குடிகளின் 'நம்பிக்கையின் பாடல்' எனப்படுகிற இன்னொரு பாடல் 'Ywa' திரும்ப வந்து தங்களையெல்லாம் காப்பாற்ற எதிர்பார்த்திருக்கிற நம்பிக்கையை பிரதிபலித்தது.


ஒரு விஷேசம் என்னவெனில், இந்த கரண் குடிகளைப் பற்றி குறிப்பிட்டாக வேண்டியது, தொடர்ந்து விடாமல் பரவி வந்த பௌத்த மதத்தின் எவ்வித பாதிப்பும், விக்கிரக வணக்கமும், அவர்கள் மத்தியிலே இருந்த இவர்களைத் தொற்றிக் கொள்ள முடியாமலே போனது தான். மட்டுமல்ல, மற்ற எல்லா பழங்குடிகளை விடவும் இவர்களை நம் வேதாகமத்துக்கு நெருங்கி இருந்தவர்களை நினைக்க இடமுண்டு.


இவர்களின் வாழ்க்கையின் பல காரியங்கள் இவர்கள் எருசலேமை விட 6000 கி.மீ.க்கும் அப்பால் இருந்தாலுமே வியப்பூட்டுகிற வகையில் சில ஒற்றுமைகளைக் காணலாம். யூதர்களுக்கு Yahweh, கரண்  குடிகளுக்கு Y'wa. உலகம் உருவாகி, மனிதன் வந்து பாவம் செய்த இடம் வரை இவர்களின் விவரிப்புகளுக்கும், ஆதியாகம விவரிப்புகளுக்கும் உள்ள நெருக்கம் ஆச்சர்யமே. ஆக யூத, கிறிஸ்துவத்தின் பாதிப்புகளை இந்த கரண் குடிகளிடம் மறைமுகமாக நாம் காண முடியும்.


ஒரு கோணத்தில் பார்த்தால் Y'wa அதாவது முழுமுதல் கடவுளைப் பற்றின கருத்துக்கள், யூத, கிறிஸ்த்துவ சமயங்களுக்கும் முற்பட்டதாய் இருக்கலாமொவேனில், இருக்கவும் வாய்ப்புண்டு என்றே சொல்லலாம். ஆனால் ஒரு சிறப்பு என்னவெனில் அவர்கள் தங்கள் நம்பிக்கைகளின் முழுமையின்மையை பூரணமாக உணர்ந்து, அதை முழுமைப்படுத்த வல்லவைகளை எதிர்நோக்கி காத்திருந்தது தான். அவர்கள் பாடல் ஒன்றின் வரிகள் இப்படியாக இருக்கின்றன...

"Y'wa வின் புதல்வர்கள் - அந்த வெண்ணிற அந்நியர்கள்.
அவர்களே Y'wa வின் வார்த்தைகளை பெற்றுக் கொண்டனர்.
வெண்ணிற அந்நியர்கள் Y'waவின் புதல்வர்களே.
ஆதி நாட்களிலேயே 'வார்த்தை'களை பெற்றுக் கொண்டார்கள்."
இப்படியாக இருந்த இந்த கரண் குடிகளின் மத்தியில் முதலில் ஊழியம் செய்ய வந்தவர் அருட்திரு. ஜார்ஜ் போர்ட்மேன் என்பவர். இவர் புகழ் பெற்ற ஊழியரான அதோனிராம் ஜட்சனின் (Adoniram Judson) உடன் ஊழியராவார்.

இவர்களின் ஊழியத்தின் முதல் கிறிஸ்தவரான கரண் குடியினரின் பெயர் கோ தா பயு (Ko Thah -byu) இவரே பின் நாட்களில் கரண் குடியினரின் ஊழியக்காரராக மாறி, அவர் ஊழியம் செய்த 12 வருட காலத்திற்குள் 1270 மக்களை ஆண்டவருக்குள் வழிநடத்தினார் என்று ஒரு புள்ளி விவரம் சொல்கிறது. அன்றைய கால கட்டத்தில் இது குறிப்பிடத் தக்க நிகழ்வாகும். இன்றைக்கும் கரண் குடிபால் உள்ள பகுதியில் நிறைய ஆலயங்கள் உண்டு.

நல்ல விசுவாசிகளாய் மாறின அனேக கரன் குடிகளை அவர்களின் இந்த விசுவாசத்திற்காக ஒடுக்குவதும், துன்புறுத்துவதும் இன்றும் தொடர்ந்து கொண்டிருப்பது ஒரு சோகமான விஷயமாகும். முந்தைய நாட்களில் கரண் குடிகளோடு மற்றவர்களுக்கு சுமூக உறவு இல்லாமல் இருந்ததை இந்த கட்டுரையின் துவக்கத்தில் நாம் கூறி இருக்கிறோம். இப்போதும் அது ரூபத்தில் தொடர்வதை என்னவென்று சொல்ல. 

பலர், இவர்களை இப்படியாக ஒடுக்கப்படுவதற்கு சொல்கிற காரணம், இவர்கள் மேற்கத்தியர்களின் கைக்கூலியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்களாம். அவர்கள் மதத்தின் பெயரால் நாட்டை பிளவுப்படுத்த செய்கிற சதிக்கு இவர்கள் உடன்பட்டிருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்... எத்தனை முரண்பாடுகள் இல்லையா... 


எப்படி இருந்தாலும், அந்த நாட்களில் யார் யூகித்தார்களோ என்னவோ நமக்குத் தெரியாது, ஆனால் இப்போது கரண் குடிகளின் இந்த எல்லா காரியங்களையும் பார்க்கும் பொழுது அவர்களின் பழக்கவழக்க பின்னணிகள் எதை நெருங்கி வருகின்றன, எதை உணர்த்துகின்றன என்பதை நம்மால் யூகித்து விட முடியுமென்றே நம்புகிறோம்.

ஆம்! ஆண்டவரின் திட்டங்கள், செயல்பாடுகள் பற்றி அறிய வரும் பொழுது அவரை மகிமைப் படுத்துவதல்லாமல் வேறு வழியில்லை நமக்கு.
-எட்வினா ஜோனஸ்