Monday, November 21, 2016

சரித்திரம் அவரின் சித்திரம் - 3

நமது வேதாகமத்தில் எஸ்தரின் புத்தகத்தில் முதலாம் வசனம் பெர்சிய பேரரசு பற்றி இப்படிச் சொல்கிறது. 'இந்து தேசம் முதல் எத்தியோப்பியா தேசம் வரைக்குமுள்ள 127 நாடுகளையும் (!) அரசாண்ட அகாஸ்வேரு' என்று... இந்த ராஜா பெர்சியா மகாராஜாக்களில் ஒருவர் எனலாம்.

ஒரு விசேஷமான காரியம் என்னவெனில், முக்கியமான பெர்சிய ராஜாக்களான கோரேஸ், தரியு, அர்தசஷ்டாக்கள், அகாஸ்வேருக்கள் இவர்களுக்கு வேத சரித்திரத்தினூடாக இருக்கிற பங்கு கடந்த முறை பார்த்த அசீரிய ராஜாக்களிலிருந்து இவர்கள் மாறுபட்டவர்கள். ஆண்டவரை ஒரு சமயம் அறிய வேண்டிய பிரகாரமாய் அறியாமலிருந்தாலும், அவரின் மகத்துவமான திட்டத்தின் செயல்பாடுகளுக்கு இவர்கள் பயன்பட்ட விதம் வியக்க வைக்கிறது. எஸ்தர், நெகேமியா, எஸ்றா, ஏசாயா, தானியேல் புத்தகங்களில் இவர்களை சந்திக்க முடியும்.

அர்தசஷ்டாவும், அகாஸ்வேரும் நம்மில் பெரும்பாலானோருக்கு பரிச்சயமென்றாலும், தெரியாத விஷயம் என்னவெனில், இந்த இரு பெயர்களில் ஐந்து ராஜாக்கள் இருக்கிறார்கள் என்பது தான்!!!. வேதாகமத்தில் அவர்களை இப்படி வித்தியாசப்படுத்திக் காட்டவில்லை என்றாலும், சரித்திரப்படி அவர்கள் அப்படித்தான்.

நாம் இந்தப் பகுதியில் முக்கியமாகப் பார்க்கப்போகிற கோரேஸ்க்கு முன்பாக, இதைக் கொஞ்சம் பார்த்து விடலாம்.

எஸ்றா 4ம் அதிகாரத்தில் வருகிற அர்தசஷ்டாவும் (வச.7), எஸ்றா 7ம் அதிகாரத்தில் வருகிற அர்தசஷ்டாவும் (வச.1) வேறு வேறு ராஜாக்கள்.

அர்தசஷ்டா - I אַרְתַּחְשַׁשְׂתָּא (ARTAXERXES - I) எஸ்றா 4ம் அதிகாரத்தில் வருகிறவர். கோரேஸ்க்கு பின்பாக, தரியு ராஜாவுக்கு முன்பாகவும் ஆட்சியிலிருந்தவன். அதாவது கி.மு.465 முதல் 424 வரை, இவர் காலத்தில் சிலரின் பேச்சைக் கேட்டு எருசலேம் ஆலயம் கட்ட தடை விதிக்கப்பட்டதை இவருக்குப் பின் வந்த தரியு ராஜா நீக்குகிறார்.
அர்தசஷ்டா - II (ARTAXERXES - II LONGIMENUS) எஸ்றா 7ம் அதிகாரத்தில் மற்றும் நெகேமியா புத்தகத்திலும் வருகிறவர். (கி.மு.404 - 338) எஸ்றாவுக்கும், நெகேமியாவிற்கும் எருசலேம் போய் திரும்பி வர அனுமதித்த ஒரு நல்ல மகா ராஜா, எஸ்றாவின் எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றினார். (எஸ்றா 7: 6, 12, 23).
'அகாஸ்வேரு' என்ற பெயரில் மூன்று ராஜாக்கள் உண்டு. அகாஸ்வேரு - I தானியேல் 9: 1ல் வருகிறார். மேதியனான இந்த அகாஸ்வேரு, மேதியனான தரியு ராஜாவின் தந்தையாகும். அகாஸ்வேரு - II எஸ்றா 4: 6ல் வருகிற இவர் வேறு. கி.மு.529 முதல் 522 வரை ஆட்சியிலிருந்த இவர் கோரேஸின் மகனாக இருந்திருக்கலாம். அகாஸ்வேரு - III (AHASUERUS) இவர் தான் எஸ்தரில் நாம் பார்க்கிற மகா ராஜாவான அகாஸ்வேரு. தானியேல் 11: 2ல் உள்ள தீர்க்கதரிசனப்படி - அதில் வருகிற 4வது ராஜாவாக இவர் இருக்கக்கூடும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

சரி. எதற்கு இந்த விஷயங்களை நாம் தெரிந்து கொண்டு என்னவாகப் போகிறது என்று பலர் நினைக்கவும் கூடும். இவர்கள் வேறு வேறு காலகட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று புரிந்துகொள்ளும் பொழுது தான், நாம் எஸ்ரா, நெகேமியா, எஸ்தர் புத்தகங்களை சரியானபடி விளங்கிக்கொள்ள இயலும்.
இந்த பெர்சிய ராஜாக்களில் வெகு சுவாரஸ்யமான கதையைக் கொண்டவர் கோரேஸ் மகாராஜா (Cyrus) பாபிலோனிய ராஜாவான நேபுகாத்நேச்சார் மூலமாக, வணங்கா கழுத்துள்ள தம் ஜனங்களுக்கு பாடம் கற்றத் தந்தார் ஆண்டவர். அவன் தேவாலயத்தைக் கொள்ளையிட்டு, தானியேல் முதலான யூத இளைஞர்களை சிறைப்பிடித்து, பாபிலோனுக்கு கொண்டுபோக அனுமதித்த ஆண்டவர், இந்த பெர்சிய ராஜாவான கோரேஸ் காலத்தில் யூத ஜனங்களை மறுபடி எருசலேமிற்கு திரும்பப் பண்ணுவதைப் பார்க்கலாம்.
யூத ஜனங்களுக்கு நிகழ்ந்த இந்த 70 வருஷ நிகழ்வுகளில், இரு வேறு காலகட்டத்தில் வாழ்ந்த இரு வேறு சாம்ராஜ்யத்தின் இரு மகாராஜாக்களை, ஒரு வகையில் சதுரங்கத்தில் காய் நகர்த்துகிறதைப் போல, ஆண்டவர் தம் மகத்தான சித்தத்தின்படி எப்படி பயன்படுத்துகிறார் பாருங்கள்.

நல்லது, யார் இந்த கோரேஸ் ராஜா?
பெர்சியப் பேரரசின் முதல் முக்கியமான முதல் ராஜாவான இவர் கி.மு.539ல் தான் உலக சரித்திரத்தில் தன் முத்திரையைப் பதித்தான் என்று சொல்லலாம். ஏனெனில் இந்த கி.மு.539 தான் மகா பாபிலோனிய அரசை ஒரே நாளில் கோரேஸ் வீழ்த்தின வருடம். ஆனால் இப்படி ஒரு ராஜா வரப் போகிறான் என்று, 'ஆண்டவரைப் பற்றி ஏதும்' அறிந்திராத இந்த ராஜாவை முன்னறிவித்தது யார் தெரியுமா? கொஞ்சம் குறைய கோரேஸ்க்கு 150 வருஷங்களுக்கு முன்பிருந்த ஏசாயா தீர்க்கதரிசி தான்.

"...நான் உன்னைப் பெயர்சொல்லி அழைத்து, நீ என்னை அறியாதிருந்தும், உனக்கு நாமம் தரித்தேன்." (ஏசாயா 45: 4)

"கோரேசைக் குறித்து: அவன் என் மேய்ப்பன்; அவன் எருசலேமை நோக்கி: நீ கட்டப்படு என்றும்; தேவாலயத்தை நோக்கி: நீ அஸ்திபாரப்படு என்றும் சொல்லி, எனக்குப் பிரியமானதையெல்லாம் நிறைவேற்றுவான் என்று சொல்லுகிறவர் நான்." (ஏசாயா 44: 28)

இப்படி இந்த ராஜாவினுடைய பெயரை அத்தனை வருஷங்களுக்கு முன்பாக குறிப்பிட்டது மட்டுமல்ல, அவன் செய்யப் போகிற காரியங்களைப் பற்றியும் முன்னறிவிக்கிறார் ஏசாயா.

ஏசாயா தீர்க்கனின் காலம் கி.மு.740 முதல் 680 வரை எனப்படுகிறது. இந்த நாட்களில் பாபிலோனிய பேரரசு கூட உருவாகவில்லை. ஏசாயாவிற்கு பின்பே அது ஆரம்பிக்கிறது (கி.மு.645 முதல் 539). ஆனால் அதற்கு முன்பாகவே அந்த பாபிலோனிய பேரரசை வீழ்த்துகிற கோரேஸ் பற்றின குறிப்புகள் எத்தனை ஆச்சர்யம்!

நேபுகாத்நேச்சாரின் காலத்தை பாபிலோனிய பேரரசின் உன்னதமான காலங்கள் ஆரம்பிக்கிற வருஷங்களாக எடுத்துக் கொண்டால் கி.மு.624லிருந்து அதன் வல்லமை, பராக்கிரமம் அதிகரித்துக் கொண்டே போனது. பல வகைகளிலும் புகழ் பெற்றது. குறிப்பாக ராணுவ பலம். தலைநகரமான பாபிலோன், முக்கிய நதியான யூப்பிரட்டீஸின் நதியோரம் அமைந்ததொன்றாகும்.
பாபிலோனிய ராணுவ பிரதானிகள் இந்த நகரத்தின் கோட்டை அரண்களை எவ்விதமாக வடிவமைத்திருந்தார்கள் எனில், ஓடிக் கொண்டிருக்கும் நதியையே கோட்டையைச் சுற்றி இருக்கிற அகழியைப் போல அமையச் செய்திருந்தார்கள்.
மட்டுமல்ல, நதியின் ஒரு கால்வாய் நகருக்குள்ளும் சென்றது. இன்னும் பெரிய வலுவான வெண்கலக் கதவுகளும் அரண்களில் இருந்தன. இந்த நதி 'அகழி' அமைப்பே எவரும் பாபிலோனைத் தாக்க நினைத்துக் கூட பார்த்துவிட முடியாதபடி மாபெரும் பாதுகாப்பு அரணாக இருந்தது. நதியை ஒட்டின கோட்டைச் சுவரின் அகலம் 21 அடிகளுக்கும் அதிகமாகும். இதைத் தாண்டி, இன்னொரு சுற்று மதில் சுவரும் இருந்தது.
எவரும் நெருங்க யோசிக்கக்கூடத் தயங்குகிற இந்த மகா பிரமாண்டத்தினால் தான் நேபுகாத்நேச்சார் தானியேல் 4: 30ல் 'இது என் வல்லமையின் பராக்கிரமத்தினாலும், என் மகிமைப் பிரதாபத்துக்கென்று, ராஜ்யத்துக்கு அரமனையாக நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா?' என்கிறான்.

எனினும், கோரேஸ் ராஜா, லிடியா, சர்தை போன்ற ராஜ்யங்களை ஜெயித்த பிறகு, இந்த மாபெரும் பாபிலோனுக்கு குறி வைக்கிறான். அந்நேரம் பாபிலோனின் மகா ராஜாவாக இருந்தவன் நேபோனிடஸ். (இவனுடைய மகனான பெல்ஷாத்சார், உடன் ஆளுநனைப் போல, அரண்மனையில் இருந்தான். தானியேல் 5: 1) இந்த பாபிலோனை வெல்ல கோரேஸ் மேற்கொண்ட உத்தி மிகப் பிரசித்தமானது.

பாபிலோனுக்கு வெளிப்புறத்தில், அதற்கு எதிரே ஆனால் சற்றுக் கீழாக இருந்த செயற்கையான ஏரி ராணி நிட்டோகிரிஸ் (Nitocris) ஏரியில், போகும்படியாக, கோட்டையைச் சுற்றி இந்த நதி அகழியில், ஒரே நேரத்தில் ஏராளமான கால்வாய்களை வெட்டி, நதியோட்டத்தை திருப்பிவிட, மிகக் குறைந்து போன ஆழத்தில், கோரேஸின் படைகள் எளிதாகக் கடந்தன. இதில் சுவாரஸ்யம் என்னவெனில், தங்களின் பாதுகாப்பு அரணைப் பற்றின மிதமிஞ்சிய நம்பிக்கையில் அரண்களிலிருந்த மாபெரும் கதவுகளைக் கூட சரியாக அடைக்காதிருந்தார்களாம் பாபிலோனியப் படையினர். நிலைமைகள் கட்டுக்கு மீற முக்கியமான ஒரு பாபிலோனிய தளபதி கட்சி மாற, வெகு சுலபமாக ஒரே நாளில் பாபிலோனிய அரசு வீழ்ந்தது. கோரேஸின் ஆளான மேதியனான தரியு, பெல்ஷாத்சார் கொலை செய்யப்பட்டு விட ராஜாவானான்.

பின்பு இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை பல சரித்திர ஆசிரியர்களும் பதிவு செய்துள்ளனர். என்றாலும், இதில் குறிப்பிடத்தக்க காரியம் என்னவெனில், இப்படி நடக்கப் போவது பற்றின குறிப்புகள் ஏசாயாவிலும் (46: 10, 11), எரேமியாவிலும் (50: 38 / 51: 30 - 32) முன்பாகவே எழுதி வைக்கப் பட்டிருந்ததுதான். 'மர்டக்' என்ற பாபிலோனிய தெய்வமொன்றை வணங்கி வந்த கோரேஸ்க்கு, பாபிலோன் வீழ்ந்த பிறகும், புதிய அரசில் மிக முக்கிய பொறுப்பில் இருந்த தானியேல் தீர்க்கதரிசி, கோரேஸிடமும் மிகுந்த செல்வாக்கு உடையவராய் இருந்தார் (தானியேல் 6: 28).
ஒரு வேளை , கோரேஸிடம், தானியேல் எப்படி கோரேஸ் பிறப்பதற்கு வெகு வருஷங்களுக்கு முன்பாகவே, அது பற்றி ஏசாயா முன்னறிவித்தார் என்றும், அவர் ஜெயிக்கப் போவது பற்றின ஏசாயா மற்றும் எரேமியாவின் குறிப்புகளையும்கூட சொல்லி இருந்திருக்கக் கூடும். விளைவு...

கோரேஸின் இந்த ஆச்சர்யமான அறிக்கை, அதுவும் அவனுடைய முதலாம் வருஷத்திலேயே!
"பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் பூமியின் ராஜ்யங்களையெல்லாம் எனக்குத் தந்தருளி, யூதாவிலுள்ள எருசலேமிலே தமக்கு ஆலயத்தைக் கட்டும்படி எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்." 
(2நாளாகமம் 36: 22 & எஸ்றா 1:2) என்கிறான்.

(இந்த இடத்தில் ஏசாயா 44: 28ஐ நினைவுகூர்வது நல்லது).

கோரேஸு டைய இந்த அற்புதமான அறிக்கை எஸ்றா 1: 2-4ல் உண்டு. மட்டுமல்ல, பாபிலோன் ராஜா எடுத்துக் கொண்டு போன தேவாலயத்து பாத்திரங்களை எல்லாம் திரும்பக் கொடுக்கிறான். ஒப்படைத்தது யாரிடம் தெரியுமா?

பாபிலோனுக்கு சிறைப்பிடித்துக் கொண்டு போகப்பட்ட யூதாவின் ராஜாவான யோயாக்கீனுடைய மகனாகிய சேஸ்பாரிடத்தில் (SHESHBAZZAR שֵׁשְׁבַּצַּ֔ר ) தான். இதன் விசேஷம் என்னவெனில் தலைமைப் பொறுப்பு மீண்டுமாக தாவீதின் வம்சாவளியினரான ஒருவரிடமே சேர்வது தான். இவரைத் தொடர்கிற செருபாபேலுமே (Zerubbabel זְרֻבָּבֶל ) இந்த தாவீதின் வழியினனாக இருப்பதைக் கவனிக்கலாம்.
இந்த நேரத்தில் சிலருக்கு இன்னொரு சந்தேகம் எழ வாய்ப்புண்டு. கண்டெடுக்கப்பட்ட கோரேஸின் உருளையில் (Cyrus Cylinder) உள்ள விவரங்கள் எதிர்மாறாக இருக்கிறதே, பெற்ற எல்லா வெற்றிகளுக்கும் மர்டுக் தேவனை சிலாகித்து இருப்பதாக அல்லவா சொல்கிறார்கள் என்று கேட்கவும்கூடும்.

சத்திய வேதத்தில், கோரேஸின் வார்த்தைகள் பற்றி இத்தனை தீர்க்கமாய், தெளிவாய் இருந்தும், கோரேஸின் உருளையில் அப்படி இருக்கக் காரணம், அதை உருவாக்கின பாபிலோனிய பூசாரிகளின் பிரச்சாரம் என்கிறார் எமில். ஜி. கிரிச் (Emil G. Hirsch) என்கிற ஆராய்ச்சியாளர்.
ஏனெனில் கோரேஸுடனான போரில் ஜெயிப்பதற்காக நெபோனிடிஸ், பாபிலோனின் எல்லா தெய்வங்களையும் சேர்ந்து தன்னிடம் வைத்துக் கொண்டிருந்தும், தோற்றுப்போய் விட, இதை ஈடுகட்ட கோரேஸின் வெற்றிக்கு 'மர்டுக்' தேவனை பிரதானப்படுத்துகிற முயற்சி தான் இது என்கிறார் இவர். யூத ஜனங்களைத் திரும்ப அனுப்ப கோரேஸ் பிறப்பித்த அரசாணை கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. அதன் விவரங்கள் உண்மையைக் கோடிட்டுக்காட்டக் கூடும் (எஸ்றா 6: 3 - 5). இந்த கோரேஸ் ராஜாவின் கல்லறை இன்றைக்கும் பாசர்கடேயில் உண்டு. அவனைப் பற்றின விசேஷமான வாசகங்களோடு!
"உமது நாமத்தை எல்லாத் தலைமுறைகளிலும் பிரஸ்தாபப்படுத்துவேன்..." (சங்கீதம் 45: 17)

-எட்வினா ஜோனஸ் 
கட்டுரைக்கு உதவின நூல்கள்:
1. Insight of the Scriptures - Vol 1 & Vol 2
2. The Bible and Archaeology by J.A.Thompson
3. The Living Word of the Old Testament by B.W.Anderson

4 comments:

  1. மிக்க நன்றி பயனுள்ள ஆக்கம்

    ReplyDelete
  2. God bless you. மிகவும் பயனுள்ள நல்ல தகவல். இப்படியான தமிழ் ஆக்கங்களை இன்னமும் கொடுக்க கர்த்தர் தாமே உங்கள் கரத்தை பலப்படுத்துவாராக.

    ReplyDelete